
கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திராசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி மணிமேகலை (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் மருத்துவரின் ஆலோசனைப்படி தினம்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகளும், புலவனூர் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
அதனடிப்படையில் நேற்று மாலை நடைப்பயிற்சிக்குச் சென்ற மணிமேகலையை, சாலை ஓரத்தில் மது குடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் சவுக்குத் தோப்புக்குள் இழுத்துச் சென்று வாயில் மண்ணை கொட்டி, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன்பிறகு அவர் அணிந்திருந்த நகைகளை திருடிக் கொண்டு தப்பித்து ஓடியிருக்கிறார். அதன்பிறகு இயற்கை உபாதைக்காக அந்தப் பக்கம் சென்ற பொதுமக்கள், மயங்கிக் கிடந்த மணிமேகலையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார். அதையடுத்து அங்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், எஸ்.கே பாளையத்தைச் சேர்ந்த சுந்தரவடிவேல் என்ற 24 வயது இளைஞர்தான் மணிமேகலையை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

அதையடுத்து காடாம்புலியூர் பகுதியில் பதுங்கியிருந்த சுந்தரவடிவேலை போலீஸார் வளைத்துப் பிடித்தனர். அப்போது போலீஸாரை கத்தியால் கிழித்துவிட்டு சுந்தரவடிவேல் தப்பியோட முயற்சித்திருக்கிறார். அப்போது போலீஸார் சுட்டதில் சுந்தரவடிவேலின் காலில் குண்டு பாய்ந்தது. அதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.