• June 17, 2025
  • NewsEditor
  • 0

சிவங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வு குறித்த ஆய்வறிக்கையை 2023-லேயே இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம், தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணனால் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால், இரண்டு ஆண்டுகளாக அந்த ஆய்வறிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கவே, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசு ஏன் தமிழர் வரலாற்றை அங்கீகரிக்க மறுக்கிறது எனத் தொடர்ச்சியாகக் கேள்வியெழுப்பி வந்தன.

கீழடி அகழாய்வு

இத்தகைய சூழலில் கடந்த வாரம் சென்னை வந்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங், “இன்னும் அதிகப்படியான அறிவியல்பூர்வ முடிவுகள் வந்த பிறகே கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்க முடியும்” என்று கூறினார்.

பா.ஜ.க அரசின் கூற்றாக ஒலித்த மத்திய அமைச்சரின் இத்தகைய பேச்சை தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

மேலும், கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் பா.ஜ.க அரசின் தமிழர் விரோத போக்கைக் கண்டித்து, மதுரை வீரகனூரில் தி.மு.க மாணவரணி நாளை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருக்கிறது.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்!

இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை!” எனப் பா.ஜ.க அரசை விமர்சித்து ட்வீட் செய்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *