
புதுடெல்லி: சிந்து நதிகளின் நீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப புதிய திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. இதற்காக 113 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் அமைக்க முதல்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிந்து நதி கட்டமைப்பில் சிந்து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய 6 நதிகள் உள்ளன.
இந்த நதி கட்டமைப்பு நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக கடந்த 1960-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி கிழக்கு பகுதியில் பாயும் ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய 3 நதிகளின் நீரை இந்தியா பயன்படுத்தி வருகிறது. இதன்மூலம் பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் பலன் அடைகின்றன. மேற்கு பகுதியில் பாயும் சிந்து, ஜீலம், செனாப் ஆகிய 3 நதிகளின் நீரை பாகிஸ்தான் பயன்படுத்தி வந்தது.