
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளையும் தற்போது அதிமுக கூட்டணி தன்வசத்தில் வைத்திருக்கிறது. இந்த பத்திலும் இம்முறை திமுக கூட்டணியை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவையில் உட்கார வைத்திருக்கிறது திமுக தலைமை. பாஜக எம்எல்ஏ-வான வானதி சீனிவாசனின் கோவை தெற்கு தொகுதியையும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியையும் இம்முறை கட்டாயம் கைப்பற்றியே ஆகவேண்டும் என்பதும் செந்தில் பாலாஜிக்கு தரப்பட்டுள்ள முக்கியமான அசைன்மென்ட் என்கிறார்கள்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான இழுப்பு வேலைகளை செந்தில் பாலாஜி ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், கோவை தெற்கில் இம்முறை திமுக-வே போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் உடன்பிறப்புகள். கடைசியாக 2011-ல் கோவை தெற்கில் திமுக போட்டியிட்டது. அப்போது இங்கு களம்கண்ட முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, அதிமுக-வின் சேலஞ்சர் துரைசாமியிடம் தோற்றுப் போனார். இதனால், 2016, 2021 தேர்தல்களில் இந்தத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டது திமுக. இந்த இரண்டு தேர்தல்களிலுமே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளரான மயூரா எஸ்.ஜெயக்குமார் இங்கு போட்டியிட்டார். இரண்டு முறையும் அவரால் கரை சேரமுடியவில்லை.