
டிஎன்பிஎல் 14 -வது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சிவம் சிங் தொடக்கத்தில் அதிரடி காட்டினர்.
திண்டுக்கல் அணி 43 ரன்கள் இருந்த நிலையில், சிவம் சிங் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பாபா இந்திரஜித் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பாபா இந்திரஜித் அதிரடியாக விளையாடி திண்டுக்கல் அணியின் ரன்களை உயர்த்தினர். அஸ்வின் 67 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ஷைனி 7 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.
பொறுப்புடன் விளையாடி பாபா இந்திரஜித் 43 பந்துகளில் 73 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சேப்பாக் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
சேப்பாக் அணியின் பந்துவீச்சாளர் லோகேஷ் ராஜ் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அபிஷேக் தன்வார் இரண்டு விக்கெட்களும், சிலம்பரசன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி வெற்றி பெற்றது.