
திருச்சி: ‘கிளாட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ள திருச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவி ராகிணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பேனாவை பரிசளித்து, வாழ்த்து தெரிவித்தார். திருச்சி பெரிய மிளகுப்பாறை பண்டாரத்தெருவைச் சேர்ந்த தயாளன் மகள் ராகிணி. செவித் திறன் மாற்றுத்திறனாளியான ராகிணி, அங்குள்ள ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து, ‘கிளாட்’ நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்துள்ளார்.
ரூ.55 ஆயிரம் மதிப்புடைய பேனா: இந்நிலையில், தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, சென்னை செல்வதற்காக திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரிய மிளகுப்பாறை ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் அந்த மாணவி ராகிணியை சந்தித்து, பொன்னாடை போர்த்தி, ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள தனது பேனாவை பரிசளித்து பாராட்டி, வாழ்த்து கூறினார்.