• June 17, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

“உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும்.”

எதையோ எழுதிக் கொண்டிருந்த சுமித்ரா நிமிர்ந்தாள்.

“எங்காவது டூர் போகிறாயா? “

சுந்தரின் கேள்வி அவளை ஆச்சரியப் படுத்தியது.

“ஆமாம்! அடுத்தமாதம் முதல் வாரம் என் கூட வேலை பார்த்தவங்க கூட..அதற்கு என்ன! “

“என்னைக் கேட்காமல் நீ எப்படி ஃப்ளான் பண்ணலாம்?”

அவன் கண்களில் எரிச்சலும் கோபமும் இருந்தது.

“உன்னை எதுக்கு கேட்கணும் ! ரொம்ப நாளா ஆசைப்பட்டது .இப்போ எல்லா வசதியும் பண்ணி ஃப்ரெண்ட்ஸும் கூட வருகிறார்கள். அதற்கு மேல் என்ன?”

“அதற்கு மேல் என்னவா? நீ பாட்டுக்கு கிளம்பிப் போனால் அரவிந்த்தை யார் பாத்துக்கிறது!”

அவள் திகைத்துப் போனாள்.

“அதிக பட்சம் ஒரு வாரம் பத்து நாட்கள் கூட அவள் இஷ்டப்படி போகக்கூடாது என்றால் அவள் என்ன ஜெயில் கைதியா?”

“உங்க குழந்தையை நீங்க தான் பார்த்துக்கணும் . நான் ஒண்ணும் உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் அடிமையில்லை.”

ஆவேசத்துடன் சொன்னவள் தன்னை மறந்து எழுந்து நின்றாள்.

‘அம்மா’, கோபத்துடன் அதட்டினான் அவன்.

“இவ்வளவு பணம் செலவழித்து அவசியம் போகணுமா?”

அவள் வியப்புடன் அவனைப் பார்த்தாள்.

“உன்னுடைய , சுகுணாவோட பணத்தை கொடுக்கத்தான் உங்கிட்ட கேட்கணும்..இது நான் முப்பது வருஷம் உழைத்து சம்பாதித்தது”.

சொல்லும்போதே அவளுக்கு தினம்தினம் அவள் பட்ட கஷ்டங்கள் நினைவுக்கு வந்தன. இதோ நிற்கிறானே, இந்த சுந்தரை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அவதி அவதியாக வங்கிக்கு நேரத்துக்கு போகவேண்டும் என்று காலை உணவை கூட எத்தனை நாள் தவிர்த்திருக்கிறாள்.

இன்றைக்கு மாதிரி ஏடிஎம் எல்லாம் இல்லாத காலத்தில் காசாளராக இருப்பது எத்தனை சிரமம் என்பது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். சுரேஷ் காலையில் கிளம்புவதால் அவருக்கு வேண்டுவதெல்லாம் செய்து , வீட்டை ஒதுங்க வைத்து பக்கத்து வீட்டில் சாவியைக் கொடுத்துவிட்டு பறந்து பறந்து போனதெல்லாம் நினைவுக்கு வந்தது.

அப்படியும் மாதத்தில் இரண்டு நாளாவது மானேஜரிடம் மாட்டிக் கொள்வாள். எத்தனை பிரச்சினைகள், கவலைகள்! இப்போது நினைத்தால் இவ்வளவும் தான் தானா சமாளித்தது என்று வியப்பாக இருக்கிறது.

அவள் சிந்தனையைக் கலைத்தான் சுந்தர்.

“நீ என் நிழலில் இருக்கிறாய். என்னைக் கேட்காமல் எதுவும் செய்யக்கூடாது.

உன் நிழலில் இருக்கிறேனா! இந்த வீட்டுக்குப் பாதி பணம் நான் கொடுத்திருக்கிறேன்”.

‘அது உன் கடமை’, அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்ன அவனை ஏறிட்டுப் பார்த்தாள் அவள். என் மகனா இவன்!

சீராட்டி பாராட்டி வளர்த்ததெல்லாம் மறந்துவிட்டு யாரோ ஒருவனைப் போல பேசுகிறான்.

“முதலில் உன் நிழலில் இல்லை. அதுவாவது சரி போகட்டும் விட்டுவிடலாம் .ஆனா உன் கண்ட்ரோல்ல இல்லை . உன் பையன் அரவிந்த்தும் சுகுணாவும்தான் நீ சொல்றதை கேட்டு நடக்கணும். நான் இல்லை”.

“ஒரு வயசுக்கு மேல பிள்ளைங்க பேச்சைக் கேட்டுத் தான் அம்மா அப்பா நடக்கணும்”.

“அதுக்காக எல்லா விஷயத்திலும் நீ சொல்றதை கேட்கணும்னு அவசியமில்லை.என் இஷ்டப்படி நடக்க உன்னை எதற்கு கேட்கணும்!”

“கண்டிப்பா கேட்கணும். நாங்க இல்லைன்னா உன்னை யார் பாத்துப்பாங்க!”

“பெத்தவங்களை பார்த்துக்க வேண்டியது பிள்ளைங்க கடமை சுந்தர்”.

“அப்படின்னா நான் சொல்றதை கேட்டு நட”.

எதிரிலிருப்பது தன் மகனாகத் தெரியவில்லை .பெரிய ஆக்டோபஸ் ஒன்று தன் வலிய கரங்களால் தன்னை சிறைப்படுத்துவதைப் போல உணர்ந்தாள் அவள். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு பிரச்சினை அதுவும் அவள் வெளியே கிளம்ப வேண்டும் என்றாலே முன்னால் வந்து நின்றுவிடும்.

சமுதாயம், பாதுகாப்பு, உடல்நிலை, குடும்பம் என்று எட்டுக் கரங்கள் இல்லை இல்லை எண்ணற்ற கரங்கள் அவளை நோக்கி நீண்டன.

சமாளித்துக் கொண்டு தீர்க்கமாக அவனைப் பார்த்தாள்.

“நாணயத்துக்கு இரண்டு பக்கம்னு சொல்ற மாதிரி உனக்கும் கடமை உண்டு”.

“வயசாயிட்டா உங்க இஷ்டப்படி ஆட்டி வைக்கமுடியாது. ஒருவாரம் உங்களால் சமாளிக்க முடியாது என்பதுதான் இப்போது பிரச்சினை. என்னைப் பற்றிய கவலை எல்லாம் இரண்டாம் பட்சம் அப்படித்தானே! “

அவன் பேசாமல் நிற்க அவள் மேலும் தொடர்ந்தாள்.

“லீவு போட்டு சமாளிங்க! இல்லேன்னா வீட்டிலிருந்து வேலை பாருங்க ! இப்போ தான் எல்லா ஆப்ஷனும் வந்துவிட்டனவே! அப்போதான்நாலு வயசுக் குழந்தையை நாள் பூராவும் வச்சு சமாளிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு தெரியும்”.

“கொஞ்சம் கூட பாசமே இல்லாமல் பேசுறே!”

“ஆமாம் . பாசங்கிறது வழுக்கித்தான் விழ வைக்கும் என்று நீங்கள் இருவரும் நன்றாக புரிய வைத்திருக்கிறீர்கள்.காலையில் நீங்க இரண்டு பேரும் கிளம்பி போனதுக்கு அப்புறம் நாள் பூரா நான்தான் பாத்துக்கிறேன். சாயங்காலம் வரும்போதே அசந்து போய் வருவீங்க! அம்மா! நீ சாப்பிட்டியா ! ரெஸ்ட் எடுத்தியா அப்படின்னு கேட்கத் தோன்றாது. அம்மாங்கிறவளும் ஒரு மனுஷப் பிறவி தான். அவளுக்கும் ஆசைகள் உணர்ச்சிகள் உண்டு . அதைப் புரிஞ்சுக்கோ”

அவள் இவ்வளவு தூரம் பேசுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

எரிச்சலுடன் அறையை விட்டு வெளியே சென்றான்.

அரவிந்த்! இங்கே வா என்று சுகுணா அதட்டுவது கேட்டது.

என்ன பெண் இவள்! தன்னை தன் சுதந்திரத்தை எதுவும் பாதித்து விடக்கூடாது. மற்றவர்கள் எவ்வளவு கஷ்டப் பட்டாலும் அது அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை.

அவர்கள் காலத்தில் எல்லாம் மாமியார் எந்த வேலையும் செய்வதில்லை. பார்த்து பார்த்து செய்தாலும் ஏதாவது குறை சொல்லாமல் இருக்கவே மாட்டாள்.

இன்றைக்கு நிலைமை அப்படியே தலைகீழாகிவிட்டது.

ஆலமர நிழலில் இருந்தது மாதிரி அன்றைக்கு பெற்றவர்களைப் பார்த்துக் கொண்டது போக இன்றைக்கு பிள்ளைகள் பார்ப்பதில்லை.

பொறுப்புகளை சுமத்த தயாராக இருக்கிறார்கள். வயதையோ உடல் நலத்தையோ பொருட்படுத்தாமல் தங்கள் வேலை நடந்தால் சரி என்றுதானே நடந்து கொள்கிறார்கள்.

“தென்னையைப் பெத்தா இளநீரு

பிள்ளையைப் பெத்தா கண்ணீரு”

என்று அன்றைக்கே கவிஞன் சொல்லிவிட்டான்.

ரேமண்ட்ஸ் அதிபர் தன் சொத்துக்கள் எல்லாவற்றையும் மகனிடம் கொடுத்துவிட்டு சிரமப் பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது தானே!

அலை ஓய்ந்து ஸ்நானம் செய்யமுடியாது என்று சொல்லுவார்கள் . இன்றைக்குஅவள் வரைக்கும் அலைகள் ஓய்ந்த பின்னும் வழிதான் தெரியவில்லை.

அவள் வெகு நேரம் யோசித்து ஒரு தீர்மானத்துக்கு வந்தாள்.

“அம்மா! என்ன முடிவு செஞ்சிருக்கே!”

காலையில் அவன் இயல்பாக கேட்ட போது அவளும் சட்டென்று பதில் சொன்னாள்.

“ஏற்கனவே சொன்னது தான் சுந்தர். அதோடு நான் திரும்பி இங்கே வரப் போவதில்லை”.

அவன் அதிர்ந்தான்.

“என்னம்மா சொல்றே! ஒண்ணுமே இல்லாததற்கு எதுக்கு இவ்வளவு கோபப்படுகிறாய்?”

“ஒண்ணுமே இல்லையா? எங்க வயசுக்கு நிம்மதியா இருக்க முடியலை. நாங்க நினைச்ச மாதிரி எதுவும் செஞ்சுக்க முடியவில்லை.

எல்லா டாக்டரும் மனசை அமைதியா வச்சுக்க சொல்றாங்க. அது எங்கே முடியுது? “.

“அதனால நீ முதியோர் இல்லம் போகப் போகிறாயா? “

“இல்லை! நான், வேணி , சியாமளா மூன்று பேரும் சேர்ந்து ஒரு வீடு பார்த்திருக்கிறோம் .

எங்க இஷ்டத்துக்கு சமைக்க சாப்பிட ஊர் சுற்றப் போகிறோம்.இனியாவது கொஞ்ச நாள் எதைப்பற்றியும் யோசிக்காமல் எங்க வாழ்க்கையை எங்களுக்காக வாழப் போறோம்.உங்க கவலை பொறுப்பு உங்களோடது”.

சுகுணா முன்னால் வந்தாள்.

“அத்தை! ஒரு வாரம் உங்க ப்ளான்படி டூர் போயிட்டு வாங்க! 

நீங்க இல்லாம வீடு நல்லாவே இருக்காது!”

சுமித்ரா சிரித்தாள்.

“நேற்றைக்கு இந்த வார்த்தையை சொல்லியிருந்தா நான் சந்தோஷப் பட்டிருப்பேன். ஆனா உனக்கு இப்போ தான் பேசத்தோணுது இல்லை!”

“மரம் பட்டுப் போற மாதிரி மனசும் பட்டுப் போச்சு . இனிமே சொல்றதுக்கு எதுவுமே இல்லை”.

உறுதியுடன் சொன்னவள் தனக்கு வேண்டியவைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தாள். 

அறை வாசலில் சிலையாக நின்ற அவர்கள் இருவரையும் அவள் பொருட்படுத்தவில்லை. இனி அவள் பொருட்படுத்தப் போவதுமில்லை.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *