
வேலூர்: தமிழக விவசாயிகளிடம் இருந்து ஆந்திர மாநில மாம்பழ கூழ் தொழிற்சாலைகள் மாங்காய்களைக் கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்த பிரச்சினையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக – ஆந்திர எல்லை கிராமமான பரதராமியில் மாங்காய்களைச் சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் – ஆந்திர எல்லை மாவட்டங்களில் இந்தாண்டு மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் மா விவசாயிகளுக்கான மாம்பழ கூழ் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாததால் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மாம்பழ கூழ் தொழிற்சாலைகளுக்கு ஆண்டு தோறும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்தாண்டு வேலூர் மற்றும் அதையொட்டிய சித்தூர் மாவட்டங்களில் மாங்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால், வேலூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.