
டெஸ்ட் கிரிக்கெட்டில் 2016-ல் அறிமுகமாகி, முதல் தொடரிலேயே முச்சதம் அடித்த கருண் நாயர் அடுத்த 6 மாதங்களிலேயே அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார்.
அதன்பிறகு அணியில் இடம்பிடிக்க கடுமையாகப் போராடிய கருண் நாயருக்கு கடந்த 7 ஆண்டுகளாக வெறும் ஏமாற்றம்தான்.
இருப்பினும், முயற்சியைக் கைவிடாத கருண் நாயர் கடந்த ஓராண்டாக உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், சச்சின் உள்ளிட்ட பிரபல வீரர்கள் தாமாக முன்வந்து பாராட்டினர்.
மார்ச்சில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியில் கருண் நாயர் இடம்பெற வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர்கள் வலியுறுத்தினர்.
ஆனால், அப்போது வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், ஐ.பி.எல்லில் டெல்லி அணியில் சிறப்பாக கருண் நாயர் விளையாடிக்கொண்டிருந்தபோது இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவரின் பெயரைச் சேர்த்து பி.சி.சி.ஐ தேர்வுக்குழு.
அதன்படி, இங்கிலாந்து சென்ற கருண் நாயர் ஏற்கெனவே கவுண்டியில் ஆடிய அனுபவத்துடன், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார்.
அடுத்ததாக வெள்ளிக்கிழமை (ஜூன் 20) 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கத் தயாராக இருக்கிறார்.
இந்த நிலையில், இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காமலிருந்த சமயத்தில் ஒரு முன்னணி வீரர் தன்னை ஓய்வுபெறச் சொன்னதாக கருண் நாயர் கூறியிருக்கிறார்.

டெய்லி மெயில் ஊடகத்திடம் இதனைப் பகிர்ந்த கருண் நாயர், “இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவர் எனக்கு போன் செய்து ‘நீங்கள் ஓய்வு பெறுங்கள்’ என்று என்னிடம் கூறியது இன்றும் எனக்கு நியாபகம் இருக்கிறது.
ஏனெனில், லீக் போட்டிகளில் வரும் பணம் என்னைப் பாதுகாப்பாக வைக்கும் என்பதால் அப்படிச் சொன்னார்.
அவ்வாறு செய்வது எளிதாக இருந்திருக்கும். ஆனால், பணம் எதுவாக இருந்தாலும், அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுப்பதென்பது என்னை நானே தள்ளிவிடுகிறேன் என்று எனக்குத் தெரியும்.
இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவதை ஒருபோதும் நான் கைவிடப்போவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்கிருந்தோம், இப்போது எங்கிருக்கிறோம் என்று பாருங்கள்.” என்று கூறினார்.