
தேனி: சிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தேனியில் நடந்த திமுக ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் அரசுத் துறைகள் சார்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி தலைமை வகித்து வளர்ச்சிப் பணிகள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆட்சியர் ரஞ்ஜீத்சிங், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமை செயலர் பிரதீப் யாதவ், கூடுதல் செயலர் ஆர்.வி.ஷஜீவனா, தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.