
‘அஷ்வின் மற்றும் திண்டுக்கல் அணி மீது புகார்!’
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் மதுரை அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் அணியின் கேப்டனான அஷ்வின் மற்றும் அந்த அணியின் வீரர்கள் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக புகார் எழுந்திருந்தது. மதுரை அணி நிர்வாகம் கொடுத்திருக்கும் இந்தப் புகார் குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் அதிகாரப்பூர்வ விளக்கத்தை கொடுத்திருக்கிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘கடந்த 14 ஆம் தேதி நடந்த மதுரை மற்றும் திண்டுக்கல் அணிகளுக்கிடையேயான போட்டி சம்பந்தமாக மதுரை அணி சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனிடம் ஒரு புகார் அளிக்கப்பட்டது. 15 ஆம் தேதி இரவு 10:51 மணியளவில் எங்களுக்கு இந்த புகார் கிடைக்கப்பெற்றது. திண்டுக்கல் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரை நாங்கள் தீர்க்கமாக ஆய்வு செய்திருக்கிறோம். அதனடிப்படையில் சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறோம்.
‘TNCA விளக்கம்!’
1. பந்து சேதப்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. துண்டை வைத்து பந்தை சேதப்படுத்தியதாகத்தான் புகார் எழுப்பப்பட்டிருக்கிறது. அந்தத் துண்டு TNCA சார்பில்தான் இரு அணி வீரர்களுக்கும் வழங்கப்பட்டது. மேலும், அந்த பந்து போட்டி முழுவதுமே நடுவர்களின் கண்காணிப்பில்தான் இருந்தது. போட்டியின் போது யாராலும் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. அந்தப் புகார் முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையிலானதாக மட்டுமே இருக்கிறது.

2. 17 ஆம் தேதி மதியம் 3 மணிக்குள் மதுரை அணி நிர்வாகம் உரிய வீடியோ, புகைப்பட ஆதாரங்களுடன் TNCA வை அணுகினால் விசாரணைக்குழு அமைக்க உத்தரவிடுவோம்.
3. அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பும் வகையிலான புகார்களை எழுப்பினால் TNCA வின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்.

தொடரின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதில் TNCA உறுதியாக இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் போட்டியின் அறத்தை காக்கும் வகையில் நடந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.’ எனக் கூறியிருக்கிறது.
அஷ்வின் மற்றும் திண்டுக்கல் வீரர்கள் இரசாயனம் தெளிக்கப்பட்ட துண்டை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக மதுரை அணி புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.