
மாமல்லபுரம்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவ, மாணவிகளுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், கல்வி விருது வழங்கும் விழா, இறுதி கட்டமாக மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது.
இதில், சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோர்களுடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தவெக.தலைவர் விஜய் பங்கேற்றார். விழாவில், சேலம் மாவட்டம், கருமந்துறை பகுதியை சேர்ந்த ராஜேஷ்வரி என்ற பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்த மாணவி மின்சார இணைப்பு இல்லாத தன்னுடைய வீட்டில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்தது குறித்து கூறினார்.