
தஞ்சாவூர்: “கும்பகோணத்தில் கலைஞர் பெயரால் அமையவிருக்கும் பல்கலைகழகத்துக்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை. பொறுத்திருப்போம். பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தால் அதற்கு பிறகு ஆளுநருக்கு பணியவேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்துவோம்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 16) தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில்,முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி ஆற்றிய உரையில், “மாமன்னர் இராசராசன் ஆட்சி செய்த இந்த சோழ நாட்டின் காற்றை சுவாசிக்கும்போதே ஒரு கம்பீரம் பிறக்கிறது. மாடு கட்டி போர் அடித்தால் மாளாது என்று யானை கட்டி போர் அடித்த, நெற்களஞ்சியமான தஞ்சை மண்ணிற்கு வந்திருக்கிறேன். இங்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் மேட்டூர் அணையை குறித்த தேதியில் திறந்து வைத்துவிட்டு, நேற்று மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணையையும் திறந்திருக்கிறேன்!