
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞரும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வித்யஸ்ரீ என்ற இளம்பெண்ணும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
இருப்பினும், வித்யஸ்ரீயின் குடும்பத்தினர் இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அவர்கள், கடந்த ஏப்ரல் மாதம், தன்னுடைய மகளைக் கடத்தி விட்டதாக தனுஷ் மீது திருவலாங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இருப்பினும், போலீஸ் விசாரணையில் இருவரும் மேஜர் என்பதால் சேர்ந்துவாழ அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறான சூழலில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனுஷின் தம்பியான 17 வயது சிறுவன் வீட்டில் இருந்தபோது ஒரு கும்பல் அவரைக் காரில் கடத்தியது.
இது தொடர்பாக, தனுஷின் குடும்பத்தினர் உடனடியாக போலீஸில் புகாரளிக்க, கடத்தல் குற்றத்துக்காக வித்யஸ்ரீயின் தந்தை வனராஜா உட்பட அவரின் உறவினர்கள், முன்னாள் காவலர் மகேஷ்வரி, வழக்கறிஞர் சரத் ஆகியோரைப் போலீஸார் கைதுசெய்தனர்.
பின்னர் போலீஸ் விசாரணையில், தனது மகள் தனுஷுடன் வாழ்வதைப் பிடிக்காமல் அவர்களைப் பிரிக்க மகேஷ்வரி மூலம் ஏ.டி.ஜி.பி ஜெயராமனிடமும், கே.வி.குப்பம் எம்.எல்.ஏவும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான பூவை ஜெகன்மூர்த்தியிடமும் வனராஜா உதவி கேட்டு நாடியதாகத் தெரிகிறது.
மேலும், தனுஷின் தம்பி கடத்தப்பட்ட கார் ஏ.டி.ஜி.பி ஜெயராமனின் கட்டுப்பாட்டிலிருக்கும் கார் என்றும் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையில் ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஏ.டி.ஜி.பி ஜெயராமனுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஜெகன்மூர்த்தி மற்றும் ஏ.டி.ஜி.பி ஜெயராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

அப்போது விசாரணையில், கட்டப்பஞ்சாயத்து செய்யவா மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர் என்று ஜெகன்மூர்த்தி மீது நீதிபதி வேல்முருகன் காட்டமாகக் கேள்வியெழுப்பினார்.
மேலும், ஏ.டி.ஜி.பி ஜெயராமனைக் கைதுசெய்து போலீஸ் காவலில் வைக்கவும் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். அதையடுத்து, ஜூன் 26-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் ஜெகன்மூர்த்தி போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.