
தோனி தலைமையிலான இந்திய அணி 28 வருடங்களுக்குப் பிறகு 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதைத்தொடர்ந்து இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியைக் கட்டமைக்கும் வேலைகள் மெல்ல மெல்ல நடந்தன.
அதேசமயம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் 0 – 4 என இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் ஒயிட்வாஷ் தோல்விகளை இந்தியா பதிவுசெய்தது.
இந்தத் தோல்விகளால் பல சீனியர் வீரர்கள் ஓரங்கட்டப்பட்டனர்.
குறிப்பாக, டிராவிட், வி.வி.எஸ். லக்ஷ்மன் போன்றோர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றனர்.
யுவராஜ், கம்பீர், ஹர்பஜன், ஜாகீர் கான் போன்றோர் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டனர். 2015 ஒருநாள் உலகக் கோப்பை அணியிலும் இவர்கள் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், அந்தக் காலகட்டத்தில் 7 வீரர்களின் கரியரை பி.சி.சி.ஐ தேர்வுக் குழு சிதைத்துவிட்டதாக இந்திய முன்னாள் வீரரும், யுவராஜின் தந்தையுமான யோகராஜ் சிங் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இன்சைட் ஸ்போர்ட் ஊடகத்திடம் பேசிய யோகராஜ் சிங், “2011 உலகக் கோப்பைக்குப் பிறகு, எந்தவொரு காரணமும் இன்றி, டிராவிட், லக்ஷ்மன், ஹர்பஜன், கைஃப், ஜாகீர்கான், யுவராஜ், கம்பீர் ஆகியோரின் கரியரை பி.சி.சி.ஐ தேர்வுக்குழுவினர் சீரழித்துவிட்டது.
7 பேரின் கரியர் பாதாளத்தில் தள்ளப்பட்டது. அதனால்தான் அவர்கள் சிரமப்பட்டனர்.

அந்தச் சமயத்தில் தோனி கேப்டன்சியில் 5 தொடர்களை நாம் இழந்தோம். அமர்நாத்தால் (அந்தக் காலகட்டத்தில் தேர்வுக்குழுவின் முக்கிய நபர்) கேப்டன் பதவியிலிருந்து தான் நீக்கப்படுவேன் என்று தோனி கூறியிருந்தார்” என்று கூறியிருக்கிறார்.
அப்போது, இந்தியாவின் ஒயிட்வாஷ் தோல்விகளால் கேப்டன் பதவியிலிருந்து தோனி நீக்கப்படுவார் என்று அமர்நாத்துமே கூறியிருந்தார்.
ஆனால், அப்போதைய பி.சி.சி.ஐ தலைவர் என். ஸ்ரீனிவாசனால் அந்த முடிவு தடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…