
திருச்சியில் சனிக்கிழமை மாலை ‘மதசார்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் டி.வி.எஸ் பகுதியில் இருந்து திருச்சி மாநகராட்சி அலுவலகம் வரை 3 கிலோமீட்டர் தூரம் வரை பேரணி நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பல ஆயிரக்கணாக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்த பேரணியையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, இந்த பேரணியின் மீது ஹெலிஹாப்டர் மூலம் பூக்களை தூவ அனுமதி கேட்டிருந்த நிலையில், அதற்கு மாநகர காவல்துறை அனுமதி மறுத்தது.
இந்நிகழ்வில், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில துணை பொதுச் செயலாளருமான ரவிக்குமார், திருமாவளவனின் தனிச்செயலாளர் தயாளன், முதன்மைச் செயலாளர், பாவரசு, தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு, மாநில பொதுச் செயலாளர் வன்னி அரசு, திருச்சி கரூர் மண்டல செயலாளர் உட்பட மாவட்ட, மாநில நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முதலில், கார் மூலம் ரோடு ஷோ போல் சென்ற தொல்.திருமாவளவன் தலைமை தபால் நிலையத்தில் இருந்து தொண்டர்களோடு தொண்டராக நடந்து சென்றார்.
தீர்மானம்… அஞ்சலி!
பேரணி முடிவானடைந்த இடத்தில அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறிய தொல்.திருமாவளவன், `இந்தியாவை மதச்சாற்பற்ற நாடாக பாதுகாப்பது, வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்ப பெறுவது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறுவது, மதவாத வன்முறைத் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற கோருவது, கும்பல் கொலைகளை பயங்கரவாத குற்றமாக அறிவித்திட வலியுறுத்துவது’ உள்ளிட்ட 12 தீர்மானங்களை அறிவித்தார். அதன்பிறகு, சமீபத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் இறந்து போனவர்களுக்காகவும் மற்றும் அந்த விமானம் அருகில் உள்ள மருத்துவ மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதியில் விழுந்ததால் இறந்து போன மாணவர்களுக்காகவும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நமக்கு அந்த கவலை இல்லை!
அதன்பிறகு, இந்த நிகழ்ச்சியில் பேசிய தொல்.திருமாவளவன், “யார் எந்த கூட்டணி என்று தேர்தல் கணக்குகளை பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நமக்கு அந்த கவலை இல்லை. வி.சி.க, தி.மு.க-விடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது என்று சொல்கிறார்கள். அட, அற்பர்களே, அரசியல் அறியாமையில் உளறும் அரைவேற்காடுகளே, தமிழ்நாட்டு அரசியலின் திசை வழியை தீர்மானிப்பவர்கள் வி.சி.க தான். இந்திய அரசியலையும் கூர்மைப்படுத்துபவர்களும் வி.சி.க தான்.
நாங்கள் முதல்வர் பதவிக்கே ஆசைப்படவில்லை!
மதச்சார்பின்மைக்கு ஆதரவானவர்கள், எதிரானவர்கள் என்று கூர்மைப்படுத்துகிற அரசியலை வி.சி.க மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறது. இதன் வலிமையை தெரியாதவர்கள், திருமாவளவனுக்கு அரசியல் செய்ய தெரியவில்லை…பேரம் பேச தெரியவில்லை… துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்க மறுக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். நாங்கள் முதல்வர் பதவிக்கே ஆசைப்படவில்லை.

எங்கள் தந்தை அம்பேத்கர், ‘பிரதமர் பதவியை கைப்பற்றுங்கள்’ தான் என்று வழிகாட்டிருக்கிறார். அது தான் அதிகாரமுள்ள பதவி. இந்த மண்ணின் பூர்வக்குடிகள் ஆட்சி அதிகாரத்தில் வர வேண்டும். எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும், எனக்கு தெரியும், வி.சி.க-வுக்கு தெரியும். யூடியூப்பில் யாரெல்லாமோ எனக்கு அறிவுரை வழங்குகிறார்கள்.
கடந்த 35 ஆண்டுகளாக நாங்களும் அரசியல் செய்து கொண்டு தான் இருக்கிறோம். 10 ஆண்டுகாலமாக தேர்தல் அரசியல் வேண்டாம் என்று கூறியவர்கள் நாங்கள். சமகாலத்தில் எங்களோடு புறப்பட்டு வந்தவர்கள் எங்கோ வழிதவறி போய்விட்டார்கள். ஆனால், இன்றைக்கு வி.சி.க தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக இருந்திருக்கிறது.

கேரளாவிலும், மகாராஷ்டிராவிலும், கர்நாடகாவிலும் துளிர்விட்டு கொண்டிருக்கிறது. வி.சி.க இன்றைக்கு அனைத்து வரம்புகளையம் கடந்து நிமிர்ந்து நிற்கிறது. எங்களுக்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை. நாம் பட்டியல் சமூக மக்களை ஏமாற்றுகிறோம் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு நாம் என்ன சொல்வது?.
நாங்கள் அறிவு பரம்பரை
இன்றைக்கு பட்டியல் சமூக மக்கள் சமூக தளத்திலும், பொருளாதார தளத்திலும், கலையுலகத்திலும் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள் என்றால், வி.சி.க-வின் எழுச்சி தான் அதற்கு காரணம். எங்களை கூமுட்டைகள் என்று எண்ணாதீர்கள். கண்ணில் விரலை விட்டு துலாவுவோம். ஆண்ட பரம்பரை, வீர பரம்பரை என்று சொல்லக்கூடியவர்கள் நாங்கள் இல்லை. நாங்கள் அறிவு பரம்பரை. எங்களை நோக்கி அதிகாரம் வரும். எங்களை நோக்கி நாற்காலிகள் வரும். திடீரென்று பா.ஜ.க-வுக்கு முருகன் மேல் பக்தி வந்துள்ளது.

உ.பி போனால் ராமர் பக்தர், பீகார் போனால் கிருஷ்ணர் பக்தர், மகாராஷ்டிரா போனால் விநாயகர் பக்தர், மேற்கு வங்கம் போனால் காளி பக்தர், தமிழ்நாட்டுக்கு வந்தால் முருக பக்தர். பா.ஜ.க-வினர் எத்தனை வேஷம் போடுகிறார்கள் என்று பாருங்கள். இது தான் சனாதன புத்தி. இந்த மக்களை மயக்க பார்க்கிறார்கள்” அன்று ஆக்ரோஷமாக பேசி முடித்தார்.