
நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் தமிழ்நாட்டில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். மதுபானங்களை தமிழ்நாடு அரசே டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்து வரும் நிலையில், பனை மரத்தில் உற்பத்தியாகும் கள்ளை மட்டும் இறக்க, விற்க தடைவிதிப்பதா? என அவ்வப்போது கள் இறக்கும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பனை மரம் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள பெரியதாழையில் பனையேறி கள் இறக்கும் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்துக்காக கிழக்கு கடற்கரை சாலை ஓரம் உள்ள ஒரு பனந்தோட்டத்திற்கு சீமான் வந்தார். அவர் பனை ஏறுவதற்கு ஏதுவாக ஒரு பனை மரத்தில் ஏணி போல் கம்புகள் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த ஏணிப்படி போன்ற அமைப்பில் கட்டப்பட்டிருந்த கம்புகள் வழியாக முதலில் இளைஞர் ஒருவர் பனை மரத்தில் ஏறினார். அதை தொடர்ந்து சீமான், பனை ஏறி பாளை சீவுவதற்குத் தேவையான உபகரணங்களை இடுப்பில் கட்டிக்கொண்டு பனை மரத்தில் ஏறினார்.

பனையின் உச்சிக்கு சென்ற அவர், கட்டப்பட்டிருந்த மண் கலையத்தில் இருந்து கள்ளை, கீழிருந்து கொண்டு சென்ற தகரப் பாத்திரத்தில் ஊற்றி இறக்கினார். அப்போது அங்கே குழுமிருந்தவர்கள் கள் ”எங்கள் உரிமை… கள் எங்கள் உணவு..” என்றபடி கோஷமிட்டனர். அதன்பிறகு பனை மரத்தில் இருந்து கீழே இறங்கியவர், பனைமரக் கள்ளை மேடைக்கு கொண்டு வந்தார்.
மேடையில் இருந்த அனைவருக்கும் பனை ஓலையில் ஊற்றி கொடுத்து விட்டு தானும் குடித்தார் .குடித்த பின் அருமை என்று சைகை காட்டினார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பனம்பால், தென்னம்பால், ஈச்சம் பால் கடை திறக்கப்படும். சீமை சரக்கு தடை செய்யப்படும். எல்லா மாநிலங்களிலும் கள் இறக்க அனுமதி உள்ளபோது எங்கள் மாநிலத்தில் மட்டும் ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது?

|தமிழத்தில் மட்டும்தான் சாரயத்தை காச்சுபவனும் விற்பனை செய்பவனும் ஒரே ஆளாக உள்ளனர். அதனால்தான் கள்ளை தடை செய்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எளிமையாக பனை ஏற நவீன இயந்திரம் கொண்டு வருவோம்.” என்றார்.