
சேலம்: சேலத்தில் சஹகார் பாரதி அமைப்பின் (இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை மேம்படுத்தும் அமைப்பு) மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், ரிசர்வ் வங்கி இயக்குநர் சதீஷ் கே.மராத்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கூட்டுறவு இயக்கம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும். கூட்டுறவு இயக்கங்கள் நுகர்வோரை பயனடையச் செய்ய வேண்டும். அதேநேரத்தில், கூட்டுறவு இயக்கங்களுக்கு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தலைவராக வரக்கூடாது. அரசியல் கட்சியினரால் ஊழல் அதிமாகிவிட்டது. தமிழகத்தில் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன.