
‘ஆபரேஷன் ரைஸிங் லயன்’ என்கிற பெயரில், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 12) நள்ளிரவில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. இதற்கு எதிர்வினையாக, இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதல் நடத்துகிறது.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியே, ‘ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பது’ ஆகும். இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், ‘இஸ்ரேல் தனது உயிர் வாழ்தலுக்காகவும், தனக்கு இருக்கும் அச்சுறுத்தலை அகற்றுவதற்காகவும் இதை நடத்துகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம், எண்ணெய்க் கட்டமைப்புகள், ஈரானின் அணு ஆயுதத் திட்டம் சம்பந்தமான பகுதிகள் என ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கிட்டத்தட்ட 100 பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி உள்ளது.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த முப்படைத் தளபதி, அணு ஆயுத ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 78 பேர் உயிரிழந்துள்ளனர், 320-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஈரான் இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு பதிலடி தருவதுபோல, இன்று காலை முதல் ஈரான் இஸ்ரேலின் எனர்ஜி கட்டமைப்புகள், மக்கள் வாழும் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல், ஈரான் இஸ்ரேல் மீது நடத்தி வரும் தாக்குதலில் கிட்டத்தட்ட 9 பேரும், 300-க்கு மேற்பட்டோரும் காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேல் கூறுகிறது.
ஈரானின் இந்தத் தாக்குதல்களால் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் பகுதிகளில் சைரன்கள் மூலம் இஸ்ரேல் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்படி இரு நாடுகளும் தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டிருந்தால் நிச்சயம் இது பிற உலக நாடுகளையும் பாதிக்கும்.