
தேனி: ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களின் முதல் போக பாசனத்திற்காக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் இன்று (ஜூன் 15) தண்ணீரை திறந்து வைத்தனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே துவங்கியதால் வைகை அணையின் நீர்மட்டம் கணிசமாக உயரத்துவங்கியது. அணையின் மொத்தம் நீர்மட்டம் 71 அடியாக உள்ளநிலையில் தற்போது அணையின் நீர்மட்டம் 60 அடியை கடந்துள்ளது. இதையடுத்து பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற தமிழ்நாடு நீர்வளத்துறை ஜூன் 15 முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு அணையின் நீர் இருப்பைப் பொறுத்து 6,739 மில்லியன் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டது.