• June 15, 2025
  • NewsEditor
  • 0

“பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதில்லை; ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது; ஊழியர்களுக்கு அதிக வேலைகளை தருவது என எப்படி எல்லாம் முடியுமோ, அப்படி எல்லாம் நீங்கள் போயிங் மூலம் லாபத்தை சம்பாதிக்கிறீர்கள். இப்படி செய்து… பாராட்டு பெற்று அதிக சம்பள உயர்வை பெறுகிறீர்கள்”.

– இது கடந்த ஆண்டு ஜூன் மாதம், போயிங் நிறுவனத்தின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் கால்ஹவுன் மீது அமெரிக்க செனட்டர் ஜோஷ் ஹவ்லி வைத்த குற்றச்சாட்டு.

கால்ஹவுனின் பதவிக்காலத்தில், போயிங் நிறுவனத்தின் விமானங்கள் பல விபத்துகள் மற்றும் பாதுகாப்பு குளறுபடிகளை சந்தித்துள்ளது. இருந்தாலும், அவரது சம்பளம் 2022-ம் ஆண்டை விட, 45 சதவிகிதம் 2023-ம் ஆண்டில் அதிகரித்துள்ளது.

2022-ம் ஆண்டு, இவரது சம்பளம் 22.6 மில்லியன் டாலர்கள். அடுத்த ஆண்டு (2023), இவரது சம்பளம் 32.8 மில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது.

இதை சுட்டிக்காட்டி தான் கால்ஹவுனை கடுமையாக சாடியிருந்தார் ஹவ்லி. இப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வைரலாக காரணம் என்ன?

மேலே குறிப்பிட்ட சம்பவத்தில் ஹவ்லி குறிப்பிட்ட பாதுகாப்பு குளறுபடிகள் 787 ரக விமானத்தை தான். கடந்த வியாழக்கிழமை (ஜூன் 12), அகமதாபாத்தில் விபத்து ஏற்பட்ட விமானமும் 787 ரகம் தான். அதனால் தான், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பின்னணி!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் போயிங். இந்த நிறுவனத்திடம் இருந்து பல நாடுகள் விமானங்களை வாங்கி வருகிறது. ‘சீக்கிரம் டெலிவரி தர வேண்டும்’ என்று பாதுகாப்பு நடைமுறைகளை சரியாக பின்பற்றாமல் விமானங்கள் விற்கப்படுகிறது என்பது தான் குற்றச்சாட்டின் முக்கிய பின்னணி.

போயிங் 787

மேலும், விமான நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, இருக்கும் ஊழியர்களுக்கு அதிக வேலை கொடுக்கப்படுகிறது என்று அந்த நிறுவனத்தின் ஊழியர்களே முன்னர் குற்றம் சாட்டியிருந்தனர்.

புதிய தலைமை நிர்வாக அதிகாரி கூறுவது என்ன?

போயிங் விமானத்தின் பாதுகாப்பு குளறுபடி வழக்கு ஒன்றில், கடந்த ஏப்ரல் மாதம் போயிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெல்லி ஆர்ட்பெர்க் ஆஜரானார்.

அப்போது அவர், “நாங்கள் எங்களது ஊழியர்களை வேகமாக டெலிவரி செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவில்லை. பாதுகாப்பு முக்கியம் என்று அழுத்தம் கொடுக்கிறோம்” என்று பேசியிருக்கிறார்.

அகமதாபாத் விபத்திற்கு காரணம் என்ன?

வைரல் வீடியோ, மேலே கூறிய சம்பவங்கள் வைத்து பார்க்கும்போது, அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்திற்கு, ‘பாதுகாப்பு குளறுபடிகள் காரணமா?’ என்ற கேள்வி எழலாம்.

ஆனால், விபத்தின் காரணம் குறித்து இன்னமும் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *