
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் சக்கரவர்த்தி (வயது 48). இவர், பா.ம.க இளைஞரணியில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 11-ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில், தனது பைக்கில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது, பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சாலையோரம் சடலமாகக் கிடந்தார் வழக்கறிஞர் சக்கரவர்த்தி. தொடக்கத்திலேயே, அவரின் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்தது. சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக சிசிடிவி காட்சியும் அமைந்திருந்தது.
சக்கரவர்த்தி பைக்கில் செல்லும்போது, ஹெல்மட் அணிந்துகொண்டு 2 பேர் ஒரே பைக்கில் பின்தொடர்ந்து செல்வதும், அந்த நபர்கள் கிராஸிங் செய்யும்போது சக்கரவர்த்தி நொடிப் பொழுதில் கீழே விழுவதுமாக காட்சி இடம்பெற்றிருந்தது. `பின்தொடர்ந்த நபர்கள் கூர்மையான ஆயுதத்தால் பின்னந்தலையில் தாக்கியதில் சக்கரவர்த்தி உயிரிழந்திருக்கலாம்’ என்ற சந்தேகத்தில் மறுநாள் காலை பா.ம.க-வினர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அதுவரை காவல்துறையினர் `விபத்து’ என்ற கோணத்தில்தான் சக்கரவர்த்தியின் வழக்கை கையாண்டனர். சக்கரவர்த்தியின் மனைவி அளித்த புகாரின்பேரில் `சந்தேக மரணம்’ என்று வழக்கை பதிவு செய்துவிட்டு, `சக்கரவர்த்தி மிதமிஞ்சிய மதுபோதையில் தடுமாறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு இறந்துவிட்டார்’ எனவும் காவல்துறையினரே சமூக ஊடக பதிவுகளுக்கும் பதில் அளித்துகொண்டிருந்தனர். காவல்துறையினர் கொடுத்த தவறான தகவலை நம்பி பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸும், `தலைக்கவசம் அணியாததுதான் சக்கரவர்த்தியின் இறப்புக்கு காரணம்’ என்று இரங்கல் பதிவிட்டார். 12-ம் தேதி மாலை, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட சக்கரவர்த்தியின் உடலுக்கு நேரில் வந்தும் அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் அன்புமணி ராமதாஸ்.
13-ம் தேதி மதியத்துக்குமேல் சக்கரவர்த்தியின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. ஏராளமான பா.ம.க-வினர் அங்கு திரண்டனர். பதற்றம் காரணமாக, போலீஸாரும் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில்தான், பிரேத அறிக்கை தகவல்கள் வெளியாகி, தற்போது அதிர்வை கூட்டியிருக்கிறது. விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், சக்கரவர்த்தி திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. அதுவும் தலையை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கின்றனர். பின்னந்தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில்தான் சக்கரவர்த்தி நொடிப் பொழுதில் சரிந்து கீழே விழுந்து உயிரிழந்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதையடுத்து, சக்கரவர்த்தி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டினர். சோளிங்கர் அருகிலுள்ள ரெண்டாடி மற்றும் குப்புக்கல்மேடு கிராமங்களைச் சேர்ந்த பிரபு (28), மாதவன் (26) ஆகிய 2 பேரும்தான் முக்கிய குற்றவாளிகள் எனத் தெரியவந்தது.

ராணிப்பேட்டை சிப்காட் அருகே பதுங்கியிருந்த 2 பேரையும் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அப்போது, கொலையாளி பிரபு தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து போலீஸாரை மிரட்டிவிட்டு தப்பிஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், முன்னெச்சரிக்கை தற்காப்புக்காக போலீஸார் 2 முறை பிரபுவின் காலில் குறி பார்த்து சுட்டனர். இதில், இடது கால் முட்டியில் குண்டுகள் பாய்ந்து பிரபு கீழே விழுந்தான். இதையடுத்து, அவனிடம் இருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்து, அவனையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். மற்றொரு குற்றவாளியான மாதவன் மற்றும் இவர்களுடன் இருந்த துரைமுருகன் (22) என்கிற இளைஞனையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களை ஏவிவிட்டு சக்கரவர்த்தியை தீர்த்துகட்டியது யார்? என்பதையும் கண்டுபிடிக்க போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியிருக்கின்றனர்.
பா.ம.க வழக்கறிஞர் சக்கரவர்த்தி கொலை செய்யப்படுவதற்கு முன்கூட்டியே சதித்திட்டத்துடன் கொலையாளிகள் அவரை தீவிரமாக கண்காணித்து வந்திருக்கின்றனர். சக்கரவர்த்தி வசிக்கும் தெருவில், கடந்த 9-ம் தேதி இரவே நோட்டமிட்டிருக்கின்றனர். அப்போது, நாய்கள் குரைத்ததால், உணவில் விஷம் கலந்து வீசியிருக்கின்றனர். இதில் 5 நாய்கள் இறந்திருக்கின்றன. மறுநாள் காலை பார்த்த அப்பகுதி மக்களுக்கு இது எந்த வகையிலும் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், சக்கரவர்த்திக்கு கடந்த ஒருவாரமாகவே கொலை மிரட்டல் இருந்துவந்ததாகவும் கூறப்படுகிறது. தன்னுடைய பகுதியில் அரசியல் கட்சியை சார்ந்து பிரபலமாக அறியப்படக்கூடிய நபராக இருந்ததால், சக்கரவர்த்தி தனக்கு வந்த மிரட்டல்களையும் பெரிதாக எடுத்துகொள்ளாமல் அலட்சியமாக இருந்திருக்கிறார்.

இந்த நிலையில், கொலைக்கான காரணம் குறித்து முதற்கட்டமாக சில உறுதிப்படுத்த முடியாத சில தகவல்கள் உலாவிகொண்டிருக்கின்றன. அதாவது, கடந்த மார்ச் மாதம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் தொடர்புடையவர்களை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்திருக்கின்றனர். அவர்கள் தரப்பில் ஜாமீன் எடுத்து தரக்கோரி வழக்கறிஞர் சக்கரவர்த்தியை அணுகியிருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் சக்கரவர்த்தி மேற்கொண்டுவந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் சீனிவாசன் தரப்புக்கு தெரியவந்ததையடுத்து, `ஜாமீன் எடுத்து தரக்கூடாது’ என வழக்கறிஞர் சக்கரவர்த்தியை அவர்கள் மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் முற்றியதால்தான் வழக்கறிஞர் சக்கரவர்த்தி தீர்த்து கட்டப்பட்டிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. ஆனாலும், இதுவரை கொலைக்கான காரணம் மட்டுமின்றி, வழக்கின் விவரங்களை வெளியிடாமல் காவல்துறை கெடுபிடி காட்டிக்கொண்டிருப்பதால், பா.ம.க-வினர் மேலும் கொதிப்படைந்திருக்கின்றனர்.
இது குறித்து, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வழக்கறிஞர் சக்கரவர்த்தி படுகொலை பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை இரவு சக்கரவர்த்தியின் நடமாட்டத்தை சிலர் கண்காணித்து வந்ததாகவும், அதன் அடிப்படையில்தான் சக்கரவர்த்தி தனது வீட்டை நெருங்கும்போது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. சக்கரவர்த்தி அடிப்படையில் ஒரு வழக்கறிஞர், அவர் தனது கடமையை செய்ததற்காக கொல்லப்பட்டிருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
சக்கரவர்த்தியின் படுகொலை தொடர்பாக, இரு வினாக்களுக்கு தமிழக அரசும், காவல்துறையும் விடையளிக்க வேண்டும். சக்கரவர்த்தியின் படுகொலைக்கான சதித்திட்டத்தை ஒரே நாளில் தீட்டி நிறைவேற்றியிருக்க முடியாது. பல நாள்களாகவே இந்த திட்டம் வகுக்கப்பட்டு, புதன்கிழமை இரவு அரங்கேற்றப்பட்டிருக்க வேண்டும். சக்கரவர்த்தி அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் என்பது மட்டுமின்றி, பிரபல வழக்கறிஞராகவும் இருந்த நிலையில், அவருக்கு எதிரான சதித் திட்டத்தை கண்டறிந்து முறியடிக்க காவல்துறை தவறியது ஏன்? தமிழக காவல்துறையின் உளவுத்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதா? அல்லது கொலையாளிகளுக்கு துணை போனதா?

அடுத்ததாக, இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவரான பிரபு என்பவரை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது, அவர் காவல்துறை ஊர்தியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதில், காவல்துறை வாகனம் லேசாக சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. கொலையாளிகளுக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது? தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் தாராளமாக கிடைப்பதாகவும், ரூ.5,000 விலைக்குக் கூட துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
ஆனால், துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவுதான் சக்கரவர்த்தி சுட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அண்மையில், அரக்கோணம் பகுதியில் அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக தி.மு.க நகராட்சி கவுன்சிலர் பாபு உள்ளிட்ட 2 பேர் கைதுசெய்யப்பட்டனர். கள்ளத்துப்பாக்கிகள் கட்டுப்பாடின்றி புழக்கத்தில் இருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. மக்களை பாதுகாக்கத் தவறிய தி.மு.க அரசு, உடனடியாக பதவி விலக வேண்டும். சக்கரவர்த்தி படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும். அவரின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.