
இந்தியாவின் எல்லைகளைத் தவறாக காட்டியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது இஸ்ரேல் ராணுவம்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடுமையான மோதல்கள் எழுந்துள்ளன. ஈரானின் அணு ஆயுத மையம் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் நாடந்திய தாக்குதலில், அந்த நாட்டின் தலைமை ராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளார்.
ஈரான் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக இஸ்ரேல் தலைநகர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் எப்போது வேண்டுமானாலும் முழுமையான போராக வெடிக்கும் அபாயம் இருக்கிறது.
Israel செய்தது என்ன?
இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “ஈரான் உலகுக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது. இஸ்ரேல் அவர்களின் இறுதி இலக்கு அல்ல, ஒரு தொடக்கம்தான். இப்போது செயல்படுவதை தவிர நமக்கு வேறு வழியில்லை.” என ஒரு ட்வீட் செய்திருந்தது.
அதில் இணைக்கப்பட்ட புகைப்படத்தில் ஈரான் மூலம் ஏவுகணை ஆபத்து உள்ள நாடுகளை குறித்திருந்தது. ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் சில ஆசிய நாடுகளை ஈரான் ஏவுகணைகள் தாக்க முடியும் என்பதே இஸ்ரேல் ராணுவம் கடத்த முயன்ற செய்தி.
Iran is a global threat.
Israel is not the end goal, it’s only the beginning. We had no other choice but to act. pic.twitter.com/PDEaaixA3c
— Israel Defense Forces (@IDF) June 13, 2025
ஆனால் அந்த வரைபடத்தில் இந்திய எல்லைகள் தவறாக வரையறுக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பின்னர் அதில், “இந்த பதிவு பிராந்தியத்தைப் பற்றிய சித்திரம். இந்த வரைபடம் எல்லைகளை சரியாக வரையறுக்கத் தவறிவிட்டது. இந்த புகைப்படத்தால் யாராவது புண்பட்டிருந்தால் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்” என கமெண்ட் செய்தது இஸ்ரேல் ராணுவம்.
எனினும் இந்திய ஆதரவாளர்கள் பலர், இஸ்ரேல் ராணுவம் பதிவை நீக்கிவிட்டு சரிசெய்து பதிவிட வேண்டும் என்று கூறிவருகின்றனர்.
காஷ்மீரில் சில பகுதிகளை பல ஆண்டுகளாக பாகிஸ்தான் மற்றும் சீனா கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூழலும், இந்தியா அவற்றை தமது நாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதிகளாகவே கருதுகிறது.
சமீப காலமாக இந்தியா – இஸ்ரேல் இடையே நட்புறவு பேணப்படும் சூழலில், இந்த விவகாரம் தேவையற்ற சர்ச்சை என்றும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.