சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நேரில் சந்தித்தார்.
`நடந்தாய் வாழி காவிரி’ திட்டம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.ராமலிங்கம், “தமிழகத்தின் மிகப்பெரிய திட்டமாக இருக்கக்கூடிய “நடந்தாய் வாழி காவிரி” என்ற திட்டம் காவிரி ஆற்றிலே வந்து கலக்கக்கூடிய கிளை நதிகளை அதே இடத்தில் சுத்தப்படுத்தி காவிரியில் கலக்கின்ற போது சுத்தமாக நேராக கலக்க வேண்டும். இதற்கான ஒட்டுமொத்த திட்ட மதிப்பு ரூ.11,900 கோடி. முதற்கட்டமாக இந்த திட்டத்திற்காக மத்திய அரசு 990 கோடி ரூபாயை தற்போது ஒதுக்கியுள்ளது.
இது தொடர்பாக முதல் நிலையில் முதலில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நன்றி தெரிவிக்க வந்தேன்” என்றார்.
இதுபோன்ற மிகப்பெரிய திட்டங்களை எல்லாம் விவசாயிகளுக்காக தமிழகத்தில் அறிமுகப்படுத்திய நிலையில் உண்மையான விவசாயிகளை பச்சை துண்டு போட்டு ஏமாற்றுகிறார் ஸ்டாலின் என விமர்சனம் செய்தார்.
முருக பக்தர்கள் மாநாடு
மேலும், “முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தோம். ஏற்கெனவே மாநில தலைமை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நம் மண்ணைச் சார்ந்தவர் என்ற வகையில் தற்போது அழைப்பு விடுத்துள்ளோம்” என்றார்.

தூர்வார ஒதுக்கப்பட்ட பணம்..
தொடர்ந்து பேசிய கே.பி.ராமலிங்கம், “காவேரி தூர் வாராத நிலையில்தான் உள்ளது. கடைமடைக்கு தண்ணீர் செல்லாதது அனைத்தும் உண்மை. ஏதேனும் புயல் வந்தால் தூர்வார ஒதுக்கப்பட்ட பணத்தில் நடைபெற்ற பணிகள் தண்ணீரில் சென்று விட்டது என கூறுவார்கள்.
எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட் என்பதை அவர் தான் முடிவு செய்வார் என்று கூறினார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திமுக அரசை தூக்கி எறிய வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக இருக்கிறது.
இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் பாரதிய ஜனதா கட்சி 100 சதவீதம் உறுதியாக உள்ளது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் கடுமையாக உழைத்து எடப்பாடி பழனிசாமியை நிச்சயம் முதல்வராக்கிய தீருவோம் என்ற கே.பி.ராமலிங்கம் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது எல்லா கட்சிகளுக்கும் ஆசை உண்டு என்றும் ஒவ்வொரு கட்சியும் அதற்காக தான் உழைக்கிறார்கள் என்றும் கூறினார்.