
சென்னை: “திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நீர்நிலைகளை பராமரிக்க நிதி ஒதுக்க வாய்ப்பில்லை என்று ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது. இது தமிழக அரசின் செயலற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது,” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு மழைநீரை தேக்கப், பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை, வெயில் என எக்காலத்தில் மழை பெய்தாலும் மழைநீரை சேமிக்க, பாதுகாக்க தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை. குறிப்பாக மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே வெயில் காலங்களில் ஆறு, ஏரி, குளம், குட்டை என அனைத்து நீர் நிலைகளையும் முறையாக தூர் வாரி பாதுகாப்பாக வைத்திருந்தால் மழை நீரை சேமிக்க முடியும்.