
புதுடெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு நேற்று முன்தினம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர் ஆவார். அவர் அமர்ந்திருந்தது 11 ஏ என்ற எண்ணுள்ள இருக்கைதான். இந்த இருக்கையானது, ஐரோப்பிய நாடுகளில் இயக்கப்படும் 737 வகை போயிங் விமானங்களில் மிகவும் வெறுக்கப்படும் இருக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இயக்கப்படும் 787 போயிங் விமானங்களில் உள்ள 11 ஏ இருக்கையானது அதிர்ஷ்டமான இருக்கையாகப் பார்க்கப்படுகிறது.
போயிங் 787 விமானங்களில் 11ஏ என்ற எண்ணுள்ள இருக்கையானது, பெரும்பாலும், லக்சரி வகுப்புக்கு அடுத்தபடியாக அமைந்திருக்கும். அதாவது எகானமி வகுப்பு தொடங்கும் முதல் வரிசையில் முதல் இருக்கையாக ஜன்னலை ஒட்டி இந்த இருக்கை அமைந்திருக்கும். இந்த இருக்கையை ஐரோப்பிய விமானங்களில் பெரும்பாலானோர் விரும்புவதில்லை.