
கடந்த சில நாள்களாக, ‘ஈரானில் அணு ஆயுத தயாரிப்பு’ என்ற பேச்சு அடிப்பட்டு வந்தது. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கிடையில் ஜூன் 12 அன்று ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் ‘ஆபரேஷன் ரைசிங் லையன்’ என்றப் பெயரில் தாக்குதல் நடத்தியது.
ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிடுமோ என்கிற இஸ்ரேலின் அச்சம்தான் இந்தத் தாக்குதலின் பின்னணி என கூறப்படுகிறது.
அதற்கு எதிர்வினையாற்றும் வகையில், இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்களுக்கு நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி பதிலளித்தது ஈரான்.
இதில் `ஒரு பெண் உட்பட குறைந்தது இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்’ என தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்-3’ என்றப் பெயரில் ஈரான் இன்று காலைமுதல் தாக்குதலை தொடர்ந்திருக்கிறது. இந்தத் தாக்குதலின் ஏவுகணைகள் பலவற்றை இஸ்ரேல் தடுத்திருக்கிறது.
இருப்பினும் அடுக்கடுக்கான ஏவுகணைகளை ஈரான் ஏவியிருக்கிறது. இது தொடர்பாக ஈரான் ‘டெல் அவிவ் பொருளாதார மையம், பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டிடம், நிதியமைச்சகத்தின் கட்டிடம், Tel Nof விமானத்தளம், Haifa-வில் சில இடங்கள், காசா கடல் எல்லைக்குள் இஸ்ரேல் எண்ணெய் எடுக்கும் தளம் என 6 இடங்களை மட்டுமே குறி வைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறோம்” என தெரிவித்திருக்கிறது.