
குசேலன் பற்றிய புராணக் கதை பெரும்பாலானோர் அறிந்ததுதான். கிருஷ்ணரும் குசேலரும் பள்ளித் தோழர்கள். குசேலர், 27 குழந்தைகளுடன் வறுமையில் வாடுகிறார். இதனால் அவர் மனைவி, உங்கள் பால்ய நண்பர் கிருஷ்ணரைச் சந்தித்து, ஏதாவது உதவி பெற்று வருமாறு சொல்கிறார். அதோடு அவரைச் சந்திக்க வெறுங்கையுடன் போகக்கூடாது என்பதால், ஒரு பையில் அவல் கொடுத்து அனுப்புகிறார்.
குசேலரை வரவேற்கும் கிருஷ்ணருக்கு அவலைக் கொடுக்கிறார். ஒரு பிடி அவலை அவர் சாப்பிட்டதும் குசேலரின் குடிசை, மாளிகையாகிறது. இன்னொரு பிடி சாப்பிட, குசேலர் வீட்டு மண்பாண்டங்கள், தங்கப் பாத்திரங்களாக மாறுகின்றன. நகைகள் குவிகின்றன. இது குசேலருக்குத் தெரியாது. சில நாட்கள் கிருஷ்ணரின் விருந்தாளியாக இருந்துவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பும் குசேலர், வெட்கப்பட்டுக் கொண்டு, கிருஷ்ணனிடம் உதவி ஏதும் கேட்கவில்லை.