
அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த 241 உயிர்களை இழந்த பயங்கரமான விமான விபத்தில் பல குடும்பங்களின் கனவுகள் கலைந்து போயுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தார். இதில் பயணம் செய்தவர்களின் கனவுகள் கலைந்து அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீள முடியாத சோகத்துக்குச் சென்றுள்ளனர். விபத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த 10 பேர் இறந்தனர். அதில் 5 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
தொழில் ரீதியாக லண்டனுக்கு குடியேற சென்ற மருத்துவர்களின் குடும்பம் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளது பலருக்கு கண்ணீரை வரவழைத்துள்ளது. டாக்டர் பிரதீக் ஜோஷி, அவரது மனைவி டாக்டர் கோனி வியாஸ் ஆகியோர் தங்கள் 3 குழந்தைகளான மிராயா, நகுல், பிரத்யுத் ஆகியோருடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக லண்டனுக்குப் பயணம் செய்தனர். இதில் பிரத்யுத்தும், நகுலும் 5 வயதேயான இரட்டையர்கள். மிராயாவுக்கு 8 வயதாகிறது.