
பாமக-வில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் அதிகார யுத்தம் நாளுக்கு நாள் வீரியமாகிக் கொண்டே போகிறது. ராமதாஸையும் அன்புமணியையும் சமாதானப்படுத்த பாஜக தரப்பில் ஆடிட்டர் குருமூர்த்தி மூலமாக எடுக்கப்பட்ட முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், முக்கிய நிர்வாகிகள் உள்பட 45 பேரை பொறுப்புகளில் இருந்து நீக்கினார் ராமதாஸ். அவர்களில் சிலரை மீண்டும் பொறுப்பில் அமர்த்தி அதிரடி காட்டினார் அன்புமணி. கட்சிக்குள் நடக்கும் இந்த ஏட்டிக்குப் போட்டிகளை எல்லாம் பார்த்துவிட்டு, கீழ்மட்ட நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சி முகாம்களுக்கு தூதுவிட தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
பாமக-வில் அன்புமணியின் ஆதிக்கத்தைப் பிடிக்காமல் தான் பண்ருட்டி வேல்முருகன் உள்ளிட்ட செல்வாக்கான மனிதர்கள் கட்சியை விட்டு விலகினார்கள். இதில், வேல்முருகன் தமிழக வாழ்வுரிமை கட்சியைத் தொடங்கி தற்போது திமுக கூட்டணியில் எம்எல்ஏ-வாகவும் இருக்கிறார். தந்தைக்கும் மகனுக்கும் மோதல் வெடித்த சமயத்தில், கட்சியை பலப்படுத்துவதற்காக வேல்முருகன், காடுவெட்டி குருவின் மகன் உள்ளிட்டவர்களை மீண்டும் பாமக-வுக்குள் கொண்டுவர ராமதாஸ் தரப்பில் ஒரு மூவ் நடந்ததாகச் சொல்கிறார்கள்.