
கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.
மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வெளியான படைப்புகளில் ஜொலித்திருந்தனர்.
அப்படியான கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெறும். அந்த வரிசையில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சென்னையில் நடைபெற்றது.
2024 ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை மகாராஜா, விடுதலை 2 படத்துக்காக விஜய் சேதுபதி பெற்றார். இந்த விருதினை இயக்குநர் ராம் வழங்கினார்.
விருது வழங்கி பேசிய ராம், “எல்லோரும் இன்டெர்நேஷனல் ஹீரோனு சொல்லுவாங்க. ஆனா, தமிழகத்திலிருந்து, தமிழ் சினிமாவிலிருந்து உலகம் முழுக்க நடிப்புக்காகத் தெரியக்கூடிய ஒரு நடிகர் என்றால் அது அவர்தான். அவர் கால்கள் தரையில் பதிந்திருப்பதால், அவர் எவ்வளவு பெரிய இடத்துல இருந்தாலும் தெரிகிறார்” என்று கூறினார்.
விகடனின் புத்தக வாசனை மிகவும் நெருக்கமானது.!
விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய விஜய் சேதுபதி, “உங்களை முதல்ல பார்த்ததுலருந்து எனக்கு ரொம்பப் பிடிக்கும் சார் (ராம்). ரொம்ப நன்றி சார். இது என்னோட ரெண்டாவது விகடன் விருது, ரொம்ப நன்றி.
வீட்ல அப்பாவின் சட்டை, அம்மாவின் சமையல் வாசனை மாதிரி விகடனின் புத்தக வாசனை மிகவும் நெருக்கமானது.
நான் வாய்ப்பு தேடும்போது விகடன்ல வர்ற சிறுகதையைப் படிச்சிட்டு, அந்த கேரக்டர்களோட முகபாவனைகளை போட்டோ எடுத்துப் பார்த்தேன்.
முதல்ல விகடன் மதிக்காது, அது விகடனோட வழக்கம். என்னோட முதல் படம் அப்போ என் தங்கச்சிகூட கேட்டாங்க. அப்புறம் விகடன் விருது கொடுத்தபோது எனக்கு திருப்தியா இருந்துச்சு.
நாம யாருகூடயாவது மனசார கோவிச்சுக்கிட்டோம்னா, அவங்களை நமக்கு ரொம்பப் பிடிக்கும்னு அர்த்தம். விகடன்கூட நான் பலமுறை சண்டை போட்டுருக்கேன், கோவிச்சிருக்கேன்.

`மகாராஜா’வில் வாய்ப்பு கொடுத்த நித்திலனுக்கும், `விடுதலை’யில் வாய்ப்பு கொடுத்த வெற்றிமாறன் சாருக்கும் நன்றி. `வாத்தியார்’ கதாபாத்திரத்தை அவர் எழுதுனதை ரொம்ப ஆச்சர்யமா பார்த்தேன்.
அப்படி வாழ்ந்த மனுஷங்களை, அவங்களுக்கு உள்ள போய் பார்க்க முடிஞ்சதைப் பெரிய வரமா நினைக்கிறேன்” என்று கூறினார்.
இறுதியாக தன்னுடைய பார்வையில் விருது குறித்து பேசிய விஜய் சேதுபதி, “தலைவர்கள், வீட்ல இருக்கிறவங்க நியாபகார்த்தமா வீட்ல போட்டோ வைப்போம். அந்த மாதிரி இந்த விருதை எப்பயாவது பார்க்கும்போது, அந்த படத்தையும், அதுல நடந்த விஷயங்களையும் திரும்பி பார்போன்.
கூத்து பட்டறைல இருக்கும்போது முத்துசாமி சார் அழகா ஒன்னு சொல்லுவாரு, “மனோரதத்துல போய்ட்டு வாங்க-னு”.
எந்த வண்டியில போனாலும் கொஞ்சம் டைம் எடுக்கும். ஆனா மனசுல இருந்து போகும்போது டக்குனு அந்த இடத்துக்கு போயிடுவேன்.
அந்த மாதிரி, மனோரதத்தில் ஏறி உடனே அந்த விஷயத்துக்கு கூட்டிட்டு போக, வீட்ல சொந்தமாக வச்சிருக்கிற சிலைதான் இந்த விருதுன்னு நினைக்கிறேன்.” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…