
சென்னை: ஜூலை 25-ம் தேதி முதல் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை பாமக தலைவர் அன்புமணி மேற்கொள்கிறார்.
இதுதொடர்பாக நேற்று பாமக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரும் கொடுமைகளிலில் இருந்தும், பெரும் துன்பங்களில் இருந்தும், பெரும் நெருக்கடிகளில் இருந்தும், வள்ளுவரால்,‘‘அல்லவை செய்தொழுகும் வேந்து’’ என்று விமர்சிக்கப்பட்ட கொடுங்கோன்மையில் இருந்தும் உடனடியாக மீட்டெடுக்கப்பட வேண்டிய ஒரு பிரிவு மக்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் திமுக ஆட்சியின் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் தான். அவர்களைக் காப்பாற்றுவது தான் பொறுப்புள்ள அரசியல் கட்சியின் கடமை என பாமக கருதுகிறது. தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதை விட, நல்லாட்சி வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதில் தான் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.