• June 14, 2025
  • NewsEditor
  • 0

டிஎன்பிஎல் ஒன்பதாவது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை எஸ்கேஎம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி

முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அமித் சாத்விக், துஷார் ரஹேஜா அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க தொடங்கினர்.

திருப்பூர் அணி 73 ரன்கள் இருந்தபோது அமித் சாத்விக் 25 ரன்களுக்கு, சேலம் அணி வீரர் முகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களம்இறங்கிய ஃபெரார்டியோ 10 ரன்களுக்கு ஹரிஷ் குமார் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். மற்றொரு தொடக்க வீரராக களம் இறங்கிய துஷார் ரஹேஜா அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

துஷார் 28 பந்துகளில் 74 ரன்கள் அடித்திருந்த நிலையில், அருண்மொழி பந்துவீச்சு ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய முகமது அலி இரண்டு ரன்களுக்கும், பிரதோஷ் 25 ரன்களுக்கும், சசி தேவ் 18 ரன்களுக்கும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை பறி கொடுத்தனர்.

திருப்பூர் அணியின் கேப்டன் சாய் கிஷோர் 4 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. சேலம் அணியின் சிறப்பாக பந்துவீசிய பொய்யாமொழி மூன்று விக்கெட்டுகள் எடுத்தார். முகமது இரண்டு விக்கெட்களும், ஹரிஷ் குமார், சஞ்சய் ஷா, அருண்மொழி தலா ஒரு விக்கெடையும் கைப்பற்றினர்.

டிஎன்பிஎல் லீக் போட்டி

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த் ஆட்டத்தின் இரண்டாவது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.

மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் 10 ரன்களுக்கும், கவின் 33 ரன்களுக்கும், விவேக் ஒரு ரன்னுக்கும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.

நிதானமாக அடிய நிதிஷ் ராஜகோபால் 44 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து இறங்கிய சன்னி சந்து ஒரு ரன்னுக்கு ஆட்டம் இழந்தார்.

இறுதியாக, 12 பந்துகளுக்கு 31 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 19-வது ஓவரை இசக்கிமுத்து வீசினார். அந்த ஓவரில் தொடர்ச்சியாக நான்கு நோபால்களுடன், 25 ரன்களை வழங்கினார்.

பொறுமையாக விளையாடிய பூபதி 19 ரன்களுக்கும், ஹரிஷ் குமார் 23 ரன்களுக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டத்தின் இறுதி ஓவரில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வென்றது.

திருப்பூர் அணியில் சிறப்பாக பந்து வீசிய நடராஜன் மற்றும் சிலம்பரசன் தலா இரண்டு விக்கெட்டுகளும், முகமது அலி, சாய் கிஷோர் தலா ஒரு விக்கெடையும் கைப்பற்றினார். ஆட்டத்தை நிதானமாக ஆடி அணியின் வெற்றிக்கு உதவிய ஹரிஷ் குமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *