
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாவட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போது பேசிய, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, “திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட கண்ணுடையான்பட்டி சமுத்திரபாலம் கட்டுவதற்கு வந்த திட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு தாரைவார்க்கப்பட்டது.
இதனால், எங்கள் அமைச்சர் கே.என்.நேரு மீது அளவிட முடியாத வருத்தம் ஏற்பட்டுள்ளது. அந்தந்த தொகுதிக்கு என்ன வருகிறதோ அதை செய்யுங்கள். அடுத்தவர் சாப்பாட்டை எடுத்து மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள். இந்தப் பாலம் வேறு தொகுதிக்குச் சென்றதால் ஸ்ரீரங்கம் தொகுதி பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்” என ஆவேசமாக பேசி, பரபரப்பை பற்ற வைத்தார்.
அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக தி.மு.க எம்.எல்.ஏ வெளிப்படையாக குற்றசாட்டை முன்வைத்த நிலையில், அதற்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் வழங்கியிருக்கிறார்.
திருச்சி கிராப்பட்டியில் மாநகராட்சி பகுதி பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் விழா அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பழனியாண்டியின் குற்றசாட்டு குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது,

“அவர் கூறுவதில் உண்மை இல்லை. அவர் சொல்வது போல திட்டங்களை மாற்ற முடியாது” என்றார்.
ஆளும் தி.மு.க அரசில் அமைச்சராக இருக்கும் கே.என்.நேருவுக்கு எதிராக தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் வெளிப்படையாக குற்றசாட்டை முன்வைத்த சம்பவம், திருச்சி தி.மு.க வட்டாரத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறது.