
திருச்சி: “திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்போம். கூட்டணி ஆட்சி என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். ஆனால், வரும் 2026 தேர்தல் என்பது அதற்கான காலம் அல்ல” என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.
இது குறித்து அவர் இன்று (ஜூன் 13) திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியது: “விசிக சார்பில் நாளை மாலை திருச்சியில் ‘மதச்சார்பின்மையை காப்போம்’ என்கிற மையக்கருத்தை வலியுறுத்தி பேரணி நடைபெற உள்ளது. இன்றைய அரசியல் சூழலில் மதச்சார்பின்மையை பாதுகாப்பதற்கு அறைகூவல் விடுக்கும் பேரணியாக அமையும். மதச்சார்பின்மைக்கு எதிரான தாக்குதலை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. அதன் உத்திகளில் ஒன்றுதான் சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான வெறுப்பை பரப்பும் செயல். பாஜக அரசு திட்டமிட்டு வெறுப்பு அரசியலை ஆட்சி அதிகாரம் மூலம் பரப்புகிறது.