
அரசுக்கு ரூ.259 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ஒலிம்பஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கிலிருந்து விடுவிக்க துரை தயாநிதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணையை வருகின்ற 16 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மதுரை மாவட்டம் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஒலம்பஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் நாகராஜன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், வெடிபொருள் சட்டத்தின் கீழ் கடந்த 2012-ஆம் ஆண்டு கீழவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் நாகராஜன், துரை தயாநிதி உள்ளிட்ட பலர் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு மேலூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த முறைகேடு தொடர்பாக சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது அமலாக்கப் பிரிவும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது.

பின்னர் மதுரை, சென்னையில் துரை தயாநிதிக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்கள், வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை என மொத்தம் ரூ 40.34 கோடி மதிப்பிலான சொத்துகளைத் தற்காலிகமாக முடக்கியது அமலாக்கத்துறை.
இந்நிலையில் இந்த வழக்கில் தன்னை விடுக்க கோரி துரை தயாநிதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மதுரை மாவட்ட சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
துரை தயாநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘துரை தயாநிதிக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள் இருப்பதால் இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று முறையிட்டனர்.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘துரை தயாநிதியை நேரில் ஆஜர்படுத்தி அவரது உடல்நிலை குறித்து உறுதி செய்ய வேண்டும்’ என நீதிபதியிடம் முறையிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, துரை தயாநிதியின் சிகிச்சை குறித்தான முழுமையான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறி வழக்கு விசாரணை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.