
அகமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்த பாஜக தலைவர் விஜய் ரூபானி குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராவார்.
இவரது மரணம் 1965ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போரின்போது பாக் ஜெட் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டு உயிரிழந்த பல்வந்த்ராய் மேத்தாவை நினைவுபடுத்தியிருக்கிறது.
பல்வந்த்ராய் மேத்தாவின் மரணம் இந்தியாவில் வரலாற்றுக் குறிப்பாக நிலைபெற்றது. இந்தியாவில் 2009 இல் ஆந்திராவின் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மற்றும் 2011 இல் அருணாச்சலப் பிரதேசத்தின் டோர்ஜி காண்டு என மேலும் இரண்டு முதலமைச்சர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தனர்.
கடந்த 2021ம் ஆண்டு இந்தியாவின் முப்படைத் தளபதி (CDS) ஜெனரல் பிபின் ராவத் நீலகிரி பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
இந்தியாவில் அரசு பதவியில் இருந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் எனப் பலரும் விமான விபத்தில் மரணித்திருக்கின்றனர்.
1980ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி, டெல்லியின் சஃப்தர்ஜங் விமான நிலையத்தில் இரண்டு இருக்கைகள் கொண்ட விமானத்தில் வான்வழிப் பயிற்சி செய்ய முயற்சிக்கும்போது விபத்துக்குளாகி மரணமடைந்தார்.
இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் எஃகு மற்றும் சுரங்க அமைச்சராக இருந்த சுரேந்திர மோகன் குமாரமங்கலம், 1973-ம் ஆண்டு மே மாதம் புது தில்லி அருகே இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் இறந்தார்.
இவரது உடல் அடையாளம் காணமுடியாத நிலையில் இருந்ததாகவும் அவரது பேனா மற்றும் காது கேட்கும் கருவியை வைத்தே அடையாளம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவரது பேரன் மார்ச் 2014ல் பெய்ஜிங்கிற்குச் செல்லும் வழியில் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370ல் இருந்தார். இந்த விமானத்தின் பாகங்கள் கூட கண்டுபிடிக்கப்படவில்லை.
2001 ஆம் ஆண்டு, ஆக்ராவிலிருந்து 85 கி.மீ தொலைவில் நடந்த ஒரு தனி விமான விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். அதில் காங்கிரஸ் தலைவர் மாதவ்ராவ் சிந்தியாவும் ஒருவர்.
2002 ஆம் ஆண்டு, அப்போதைய மக்களவை சபாநாயகர் ஜி.எம்.சி. பாலயோகி ஆந்திராவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார்.
2005ம் ஆண்டு ஹரியானா தொழிலதிபர்-அரசியல்வாதி ஓம் பிரகாஷ் ஜிண்டால் மற்றும் ஹரியானா விகாஸ் கட்சித் தலைவர் சுரேந்தர் சிங் ஒரே ஹெலிகாப்டரில் பயணித்தபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தனர்.