
சென்னை: “அமித்ஷா உள்ளிட்டவர்கள் மூலமாக எத்தகைய உத்திகளை கையாண்டாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது. திமுக கூட்டணி அனைத்து தேர்தல்களிலும் அமோக வெற்றி பெற்று வருவதை சகித்துக் கொள்ள முடியாத அண்ணாமலை போன்ற காழ்ப்புணர்ச்சியாளர்கள் தமிழக அரசு மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள்.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2014, 2019 மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாகவும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடுத்த 512 வாக்குறுதிகளில் 50 கூட நிறைவேற்றப்படவில்லை என கோயபல்சை மிஞ்சுகிற வகையில் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து கூறியிருக்கிறார். பதவி போன பிறகு காணாமல் போய்விட்டதாக யாரும் கருதக் கூடாது என்பதற்காக தனது இருப்பை காட்டிக் கொள்வதற்கு இத்தகைய அவதூறு கருத்துக்களை கூறி வருகிறார்.