
லைபீரியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று கடந்த மே மாதம் 24-ம் தேதி கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் கடலில் மூழ்கியது.
இதனால் இந்தக் கப்பலிலிருந்த கன்டெய்னர்கள் முழுதும் கடலில் மூழ்கின. இந்த கன்டெய்னர்களில் சில கடல் அலையினால் சேதமடைந்து அதிலிருந்த பொருட்கள் கடலில் மிதக்கத் துவங்கின.
இதில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பாலிபுரோப்லின் என்ற ரசாயனப் பொருள் அடங்கிய மூடைகளும் கன்டெய்னரில் இருந்து வெளியாகிக் கடலில் மிதக்கின்றன.
பாலித்தின் பொருட்களுக்கான மூலப்பொருளான இந்த ரசாயன துகள்கள் கன்னியாகுமரி மற்றும் தனுஷ்கோடி மன்னார் வளைகுடா பகுதியில் கரை ஒதுங்கி வருகின்றன.

தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் சுமார் 10 கி.மீ தூரம் இவை கரை ஒதுங்கியுள்ளன. நாள் தோறும் டன் கணக்கில் மிதந்து கரை ஒதுங்கும் இந்த ரசாயன துகள்களை ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தி வந்த போதிலும் தொடர்ந்து கரை ஒதுங்கி வருகிறது.
இதனால் மன்னார் வளைகுடா கடல் பரப்பில் வாழும் மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் உட்கொள்ளும் சூழல் உள்ளது. நச்சுத்தன்மை கொண்ட இந்த ரசாயன துகள்களை மீன்கள் உட்கொண்டால் அவை உயிரிழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
இச்சூழலில் தனுஷ்கோடி மற்றும் பாம்பன் பகுதிகளில் உள்ள மீனவர்கள் மன்னார் வளைகுடா தென்கடல் பரப்பில் நாட்டுப்படகு மற்றும் கரை வலை மூலம் மீன்பிடிக்க வேண்டாம் என மீன் துறை அறிவித்துள்ளது.
இதனிடையே இலங்கை யாழ்ப்பாணம் கடற்பரப்பிலும் இந்த ரசாயன துகள்கள் கரை ஒதுங்கியுள்ளன. அங்குள்ள அனலைத்தீவு தெற்கு கடற்கரை மற்றும் புளியந்தீவு கடற்கரைப் பகுதிகளில் இவை கரை ஒதுங்கியுள்ளன.

இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள ரசாயன துகள்கள் சூழலுக்கும் உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்பதால் அவற்றைத் தொடாமலும் எடுத்துச் செல்லாமலும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அப்பகுதி மீனவர்களை இலங்கை அதிபர் சார்பில் அறிவிப்பு செய்துள்ளனர்.