
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் `சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4′ நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்ட பல குழந்தைகள் மக்கள் கவனத்தை ஈர்த்தனர்.
இதன் இறுதிப்போட்டியில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தை திவினேஷ் பெற்றிருந்தார்.
தனது தாத்தாவிடம் கற்றுக் கொண்ட பழைய பாடல்கள்தான் இன்றைக்கு திவினேஷுக்குப் புதியதொரு வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறது. `தெய்வக் குரலோன்’ எனச் செல்லமாக அவருடைய ரசிகர்களால் அழைக்கப்படும் திவினேஷூக்கு ஃபைனல் மேடையில் எம்.எஸ்.வி குடும்பத்தினர் `மெல்லிசை இளவரசர்’ என்கிற பட்டத்தைச் சூடி அழகு பார்த்தனர்.
இந்நிலையில் திவினேஷின் குடும்பத்தை அவர்களுடைய இல்லத்தில் சந்தித்தோம்.
“முதலில் கஷ்டங்கள் மட்டுமேதான் இருந்தது. இப்ப அந்தக் கஷ்டங்களைக் கடந்து நாங்க எல்லாரும் எங்க பையனால சந்தோஷமா இருக்கோம்.
எங்க லைஃப் மொத்தமா மாறியிருக்கு. இப்ப சமூகத்தில் நல்லதொரு மரியாதை கிடைக்குது. அதுதானங்க ரொம்ப முக்கியம்” என்றவாறு பேசத் தொடங்கினார் திவேஷின் தாய் அனிதா.
“அவனுக்கு பாட்டோட அர்த்தங்கள் எதுவும் தெரியாது. தாத்தா பாடுறதைக் கேட்டு அவனா பாடுவான். நல்ல கருத்துள்ள பாடல்கள் தானே பாடுறான்னு நாங்களும் அவன் பாடுறதைக் கேட்போம்.
பாடும் போது அவன் குரலும் ரொம்ப நல்லா இருக்கும். இவனை எங்கேயும் கூட்டிட்டுப் போற ஐடியாலாம் எங்களுக்கு இல்ல. நாங்க ரெண்டு பேருமே வேலைக்குப் போறோம். பிள்ளைங்களை அம்மா, அப்பாதான் பார்த்துப்பாங்க.
ஒரு தடவை ஸ்கூலில் இவனை விடும்போது அவங்க டீச்சர் சுசானாகிட்ட சொன்னேன். திவினேஷ் நல்லா பாடுவான் நீங்க கேட்டுப் பாருங்கன்னு… அவங்க கேட்டுட்டு இவ்ளோ நல்லா பாடுறான்… நீங்க ஏன் இவனை எந்தப் போட்டிக்கும் கூட்டிட்டுப் போக மாட்டேன்றீங்கன்னு சொல்லி ரொம்ப ஃபோர்ஸ் பண்ணிட்டே இருந்தாங்க.
எதார்த்தமா சென்னையில் சரிகமப ஆடிஷன் நடக்குதுன்னு ஃபோன்ல பார்த்தேன். அது உண்மையா? பொய்யானுலாம் தெரியல. சரி நாம ட்ரை பண்ணிப் பார்க்கலாம்னு இவர்கிட்ட சொன்னேன். இவர் பால் வண்டிக்குத்தான் போறாரு. அன்னைக்கு ஒரு நாள் லீவு சொல்லிட்டு இவனைக் கூட்டிட்டுப் போனோம்” என்றவரை நிறுத்தி திவினேஷின் தந்தை பிரதாப் தொடர்ந்தார்.

“ஆடிஷன்ல செலக்ட் ஆகிட்டு கடைசியா மெகா ஆடிஷனுக்குக் கூப்டாங்க. இவனுக்கு ரெண்டே பாட்டுதான் தெரியும். பழைய பாட்டுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பாங்களான்னு எங்களுக்கு டவுட் இருந்தது.
அங்க எல்லாரும் நல்லா பாடுறாங்க.. மெகா ஆடிஷனுக்குப் போக வேண்டாம்னு முடிவெடுத்தோம். சரி அவனுக்குத் தெரிஞ்சதைப் பாடட்டும் செலக்ட் ஆகலைன்னா பாத்துக்கலாம்னு அன்னைக்கு லேட்டா தான் ஆடிஷனுக்கே போனோம்” என்றதும் அனிதா பேசினார்.
“எங்களுக்கு இவன் செலக்ட் ஆவான்னு நம்பிக்கையே இல்ல. அங்க ட்ரெயினிங் போனப்ப கூட அவங்க, `ஸ்ருதியோட பாடுவியா?’னு கேட்டாங்க. இவனுக்கு அதெல்லாம் தெரியல.. நீ சரியாதான் பாடுற.. எப்பவாச்சும் விலகினா சொல்றேன்னு அவங்க சொன்னாங்க.
ட்ரெயினிங் முடிச்சிட்டு கிளம்பும்போது அவர்கிட்ட, `ஸ்ருதின்னு சொன்னீங்களே அதை எப்ப சொல்லிக் கொடுப்பீங்க?’னு கேட்டான். அந்த அளவுக்குத்தான் அப்ப இருந்தான். இப்ப ஸ்ருதி, டெம்போ எல்லாமே தெரியுது. நாம ஏதாவது தப்பா பாடிட்டாலும் இப்படிப் பாடக் கூடாதுமா இந்த ஸ்கேலில் பாடணும்னு சொல்றான்!” எனச் சிரித்து விட்டு தொடர்ந்தார்.

“8 மாசம் வேலையை விட்டுட்டுதான் இவனை அங்க கூட்டிட்டுப் போனோம். நிறைய யோசிச்சோம்… வாய்ப்பு ஒரு தடவைதான் வரும். நம்ம அதைக் கெடுத்துக்க வேண்டாம்னு கடன் வாங்கிதான் இவனைக் கூட்டிட்டுப் போனோம்.
கடன் கொடுத்தவங்க எல்லாரும் அட்ஜெஸ் பண்ணிக்கிட்டாங்க. சொந்தம் கூட உதவுச்சான்னு தெரியல அக்கம், பக்கத்துல எல்லாம் கேட்டு, கேட்டு உதவி செஞ்சாங்க. அவங்க எல்லாருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கோம். கடன் கொடுத்தவங்களும் எங்க சூழலைப் புரிஞ்சுகிட்டு எங்களுக்கு உதவியா இருந்தாங்க” என்றதும் பிரதாப் பேசினார்.
“இப்ப இந்தப் பெரிய வீடு வாடகைக்குப் பார்த்ததுக்கும் திவினேஷ்தான் காரணம். நாங்க கஷ்டப்பட்டோம் இப்ப சந்தோஷமா இருக்கோம். பால் வண்டி வாங்கணுங்கிறது என்னோட பதினைந்து வருட கனவு.
அது இன்னைக்கு என் பையனால நிறைவேறியிருக்கு. இவன் சின்னவனா இருக்கும் போது அப்பாவுக்கு வயசாகிட்டா பார்த்துக்குவியா?னு கேட்பேன். நீ ஏன் கவலைப்படுற நான் உன்னை பார்த்துக்கிறேன்பான்னு சொல்லுவான். எனக்கும் வயசாகல.. அவனும் பெரியவன் ஆகல… ஆனா, இப்பவே என்னைப் பார்த்துக்கிறான் என நெகிழவும் அனிதா தொடர்ந்தார்.

“கஷ்டம் எல்லாமே திவினேஷூக்குத் தெரியும். கஷ்டப்படுறதனாலதான் அவன் பாடவே ஆரம்பிச்சான். வாய்ப்பு ஒரு தடவைதான் கிடைக்கும். முயற்சி பண்ணு திவினேஷ் முயற்சியை மட்டும் விட்டுடாதன்னுதான் நான் எப்பவும் சொல்லுவேன்.
ஆரம்பத்தில் நீ ஒரு நாள் டிவியில் வந்தா போதும்னு சொல்லித்தான் அனுப்பி வச்சேன். திவினேஷையும் சரி, எங்க மூத்தப் பையன் சந்தோஷையும் சரி கஷ்டம் சொல்லித்தான் வளர்த்திருக்கோம்” என்றவரின் முகத்தில் அவ்வளவு பெருமிதம்.
இன்னும் பல விஷயங்கள் குறித்து அனிதா – பிரதாப் நம்மிடையே பகிர்ந்து கொண்டனர். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…