
திருச்சி, கே.கே.நகரில் உள்ள இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்.
இவர், தனது மனைவி அறிவுச்செல்வி பெயரில் உள்ள திருச்சி, கொட்டப்பட்டு கிராமம், அன்பில் நகரில் சுமார் 5920 சதுரடி உள்ள காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டி விண்ணப்பித்தார்.
அதன்படி, அந்தக் காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய Zone-IV பொன்மலை கோட்டம் , திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வார்டு 65-க்குரிய பில் கலெக்டர் செபாஸ்தியான் என்பவரை அணுகியபோது, அவர் வரி நிர்ணயம் செய்ய ரூ.12,000 -த்தை லஞ்சமாகக் கேட்டுள்ளார்.
அதற்கு, சீனிவாசன் மறுப்பு தெரிவிக்க, பின்னர் ரூ.10,000/-ஆக லஞ்ச தொகையைக் குறைத்துக் கேட்டுள்ளார்.
ஆனால், அவருக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனிவாசன் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதோடு, இன்று துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினர் கொடுத்த ஆலோசனையின் பேரில், பில் கலெக்டர் செபஸ்தியான் லஞ்சப்பணம் ரூ.10,000-த்தை அவரது அலுவலகத்தில் வைத்து சீனிவாசனிடமிருந்து பெற்ற போது கையும் களவுமாகப் பிடிபட்டார்.
அதோடு, செபஸ்தியானைக் கைது செய்து சோதனை செய்தபோது அவரிடம் கணக்கில் வராத மேற்கொண்டு ரூ.24,000 பணம் இருந்தது. அதனால், சந்தேகத்தின் பேரில் அத்தொகை கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக, திருச்சி பொன்மலை கோட்ட கார்ப்பரேசன் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பில் கலெக்டர் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.