
மதுரை: முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு எதிராக, அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மதுரை அம்மா திடலில் வரும் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, மாநாட்டு வளாகத்தில் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அறுபடை வீடுகள் அமைக்க போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், அதற்கு எதிராக இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில், மாதிரி அறுபடை வீடுகள் அமைக்கலாம், ஆனால் பூஜைகள் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டு, அடுத்த விசாரணை ஜூன் 13-ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைக்கப்பட்டுள்ளது.