
கோவையில் கடந்த ஏப்ரல் 27-ல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. அன்றைய தினம் கோவைக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டுப் போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு உதயநிதி வரவில்லை. அப்போது இதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை முன்னிறுத்தி திமுக-வினர் நடத்திய தடாலடி வசூல் வேட்டை தெரிந்து தான் அந்த நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்த உதயநிதி வரவில்லை என இப்போது செய்திகள் கசிய ஆரம்பித்திருக்கின்றன.
கோவை செட்டிப்பாளையத்தில் ஏப்ரல் 27-ம் தேதி மாவட்ட நிர்வாகமும் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டுப் பேரவையும் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை பிரம்மாண்டமாக நடத்தின. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தான் போட்டியை தொடங்கி வைத்தார். தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டுப் பேரவை தலைவரும், கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான தளபதி முருகேசன் தான் இதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்தார். இந்த நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக வசூல் வேட்டை நடத்தியதாக இப்போது இவரைச் சுற்றித்தான் சர்ச்சை வெடித்திருக்கிறது.