
மேலக்கோட்டையூர் ஊராட்சிக்கு உட்பட்ட காவலர் குடியிருப்பு அருகே உள்ள பூங்காவை பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் மேலக்கோட்டையூர் ஊராட்சி காவலர் குடியிருப்பு அருகே சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த சிறுவர் பூங்காவில், நாளடைவில் முறையான பராமரிப்பு இல்லாமல் போனது. போதிய பாதுகாப்பு வசதி இல்லாத காரணத்தால், பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தற்போது பூங்காவில் முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் உள்ளது. பெரும்பாலான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. பராமரிப்பின்றி இருப்பதால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வயதானோர் நடைபயிற்சி செய்யும் பாதை முழுவதும் புதர் மண்டி கிடக்கிறது. பூங்காவை முறையாக பராமரிக்காததால் சிறுவர்கள் விளையாடக்கூடிய அனைத்து உபகரணங்களும் துருப்பிடித்து, உடைந்து, பாழடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.