
2020-ம் ஆண்டு, “நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல…” என்பது போன்ற சாதி, வர்க்க, மத அடக்குமுறைகளுக்கு எதிராக `வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்’ என்ற தலைப்பில் தனியிசைப்பாடலை வெளியிட்டார் ராப் பாடகர் வேடன்.
அவரின் இசையும், குரலும், உணர்ச்சி கொந்தளிக்கும் வார்த்தைகளும் மலையாள உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
அப்போது முதல் வேடனின் பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் வரவேற்பட்டன. குறிப்பாக வேடனின் பாடல்களில் புரட்சிகரக் கருத்துகள் நிறைந்திருந்தன.
பாலஸ்தீனம் முதல் அமெரிக்காவில் தாக்கப்பட்ட கறுப்பின பெண் வரை சமூக அடக்குமுறைக்கு எதிராக உறுதியாகக் குரல் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், வேடனின் “பூமி நான் வாழுன்ன இடம்” என்ற பாடலை கேரள மாநிலம் கோழிக்கோடு பல்கலைக் கழகம் மலையாள மொழி மற்றும் இலக்கியப் பாடத்திட்டத்தில் சேர்த்திருக்கிறது.
கோழிக்கோடு பல்கலைக் கழகம் என்ன சொல்கிறது?
இது தொடர்பாக கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மலையாளம் மற்றும் கேரள ஆய்வுகள் துறையின் தலைவர் எம்.பி. மனோஜ், “மலையாள இலக்கியப் பாடத்திட்டத்தில் வேடனின் பாடல்களைச் சேர்ப்பதைப் பலர் எதிர்க்கிறார்கள்.
ஆனால் அவற்றைப் புறக்கணிப்பது கலாசார மாற்றங்களை எதிர்ப்பதாகும். இதுபோன்ற படைப்புகளைச் சேர்ப்பதன் மூலம், மாணவர்கள் அவற்றை அணுகவும், விமர்சன ரீதியாக ஆய்வு செய்யவும் ஊக்குவிக்கிறோம்.
மலையாளம் மற்றும் அமெரிக்க ராப் கலாசாரங்களின் ஒப்பீட்டு ஆய்வின் ஒரு பகுதியாக இந்தப் பாடல் இருக்கும்.

உலகளாவிய பிரச்னைகள் பற்றிய ஒரு சக்திவாய்ந்த வர்ணனையாக, இந்தப் பாடல் ‘ஒப்பீட்டு இலக்கியத்தின் அறிமுகத்தின் புதிய போக்குகள்’ என்ற தொகுதியின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் தொகுதியில் முரிங்கூர் சங்கரனின் ‘அஜித ஹரே மாதவா’ என்ற கதகளி பாடல், அதன் நவீன பதிப்பான கௌரி லட்சுமியின் அஜித ஹரே ஆகியவற்றின் ஒப்பீட்டு ஆய்வும் அடங்கும்.
இது தற்போதைய காலகட்டத்தில் பாரம்பர்ய கலை வடிவங்கள் எவ்வாறு உருவாகியுள்ளன என்பதைப் பகுப்பாய்வு செய்கிறது.” என்றார்.
அந்தப் பாடலில் என்ன இருக்கிறது?
‘பூமி நான் வாழுன்னா இடம்’ என்ற அந்தப் பாடலில் சிரியப் போர், பாலஸ்தீனிய இனப்படுகொலையிலிருந்து அய்லான் குர்தியின் மரணம், காஷ்மீரில் ஆசிஃபாவின் கொடூரமான கொலை வரையிலான உலகளாவிய பிரச்னைகளை விமர்சிக்கப்படுகிறது.
‘பூமி ஞான் வாழுன்ன அனுதினம் நரகமாய் மாறுநிடம்…’ (நான் வாழும் இந்த பூமி அனுதினமும் நரகமாக மாறிக்கொண்டிருக்கிறது) என வரிகளில் தொடங்கி உலக மக்களின் துன்பத்தை எடுத்துக்காட்டுகிறது.