
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
இந்நிலையில் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகளைச் செய்ய உத்தரவிட்டிருப்பதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்திருக்கிறார்.
அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AI 171 என்ற எண் கொண்ட போயிங் 787 ரக விமானத்தில் விமான குழுவினரோடு சேர்த்து மொத்தமாக 242 பேர் பயணித்திருக்கிறார்கள்.
தங்களின் விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாக ஏர் இந்தியா நிறுவனமும் தங்களின் X பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா குஜராத்தின் முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சருடன் இந்த விபத்து பற்றி ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருந்தது.
அகமதாபாத்தின் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கிறது.
லண்டனின் காட்விக்கை நோக்கிப் புறப்பட்ட இந்த விமானத்தில் பாஜக-வைச் சேர்ந்த குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் பயணித்ததாக Economic Time, Gujart TV 9 போன்ற நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் குஜராத் முதல்வர் பூபேந்தர் படேல் டிவிட்டரில் வெளியிட்டிருக்கும் பதிவில், “அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான செய்தியால் மனம் வருந்தியுள்ளேன்.
விபத்தில் உடனடி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், காயமடைந்த பயணிகளுக்கு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
காயமடைந்த பயணிகளைச் சிகிச்சைக்காக அனுப்புவதற்குப் பசுமைப் பாதை (Green Corridor) ஏற்பாடு செய்யவும், மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னுரிமையாக உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களும் என்னுடன் தொடர்பு கொண்டு, இந்த விமான விபத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு NDRF குழுக்கள் மற்றும் மத்திய அரசின் முழு உதவியையும் உறுதி அளித்துள்ளார்” எனக் கூறியிருக்கிறார்.