
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து பிரிட்டன் நாட்டின் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இந்நிலையில், இந்த விமானம் விபத்துக்குள்ளான பிரத்யேக சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த சிசிடிவி காட்சி காண்போரை பதைபதைக்கச் செய்துள்ளது. இந்த விமான விபத்தை அடுத்து ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர், சிஆர்பிஎஃப், கடலோர படை மற்றும் குஜராத் மாநிலத்தில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நடந்தது என்ன? – விபத்தில் சிக்கிய இந்த விமானம் அகமதாபாத்திலிருந்து இன்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு லண்டன் நகருக்கு புறப்பட்டது. ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த போயிங் 787-8 ரக விமானத்தில் மொத்தம் பயணிகள், பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள்.