• June 12, 2025
  • NewsEditor
  • 0

குஜராத்தின் தலைநகர் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 என் கொண்ட 787-8 போயிங் ரக விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் மருத்துவ மாணவர்கள் விடுதியின் மீது விமானம் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.

Ahmedabad Airplane Crash

இந்த விமானத்தில், குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 169 பயணிகள், 53 பிரிட்டிஷ் பயணிகள், 7 போர்ச்சுகீசிய பயணிகள், 1 கனடா பயணி மற்றும் இரண்டு பைலட்டுகள், 10 விமானப் பணியாளர்கள் என 242 பேர் பயணித்தனர். இந்த விபத்து நடந்த உடனேயே, மீட்புப் பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் இறங்கினர். மேலும், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

அவரைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பூபேந்திர படேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டனர். இன்னும், உயிரிழப்புகள் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விமானத்தில் பயணித்த பயணிகளில் ஒருவர் உயிர்பிழைத்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து, ANI செய்தி நிறுவனம் எக்ஸ் தளத்தில், அகமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் செல்போனில் தெரிவித்ததாக, “11A இருக்கையில் பயணித்த பயணி உயிர் பிழைத்திருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறப்பு எண்ணிக்கை குறித்து இன்னும் எதுவும் கூற முடியாது. விமானம் குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.” என்று பதிவிட்டிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *