• June 12, 2025
  • NewsEditor
  • 0

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் மருத்துவ மாணவர்கள் விடுதியின் மீது விமானம் மோதி இந்த விபத்து ஏற்பட்டது. ஏர் இந்தியாவின் கூற்றின்படி இந்த விமானத்தில், 169 இந்தியப் பயணிகள், 61 வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் 2 பைலட்டுகள், விமானப் பணியாளர்கள் 10 பேர் என மொத்தம் 242 பேர் இருந்தனர்.

Ahmedabad Plane Crash

இதில், லண்டனில் இருக்கும் தனது மகளைக் காண இந்த விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்துவிட்டதாகக் குஜராத் பாஜக மாநில தலைவர் சி.ஆர். பட்டீல் தெரிவித்திருக்கிறார்.

இந்த விபத்தில் உயிரிழவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.

அதேசமயம், விமானத்தில் பயணித்தவர்களில் 11A இருக்கையில் பயணித்தவர் உயிர்பிழைத்திருப்பதாக அகமதாபாத் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய சூழலில், இந்த விமானத்தில் பயணித்த விமான பணிப்பெண் நந்தோய் சர்மா கோங்பிரைலட்பமின் குடும்பத்தினர் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

அந்த வீடியோவில் பெண்மணி ஒருவர் விமான பணி பணிப்பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்து, “என் குழந்தையே எங்கே போனாய்? நான் உன்னைப் பார்க்க விரும்புகிறேன். நீ எங்கே இருக்கிறாய்” என அழுதார்.

அரசு தரப்பிலிருந்து உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகாத நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்குவதாக டாடா குழுமம் அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *