• June 12, 2025
  • NewsEditor
  • 0

குஜராத்தின் தலைநகர் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் ஒரு கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

முதலில், இதனை விபத்து என்று குறிப்பிடாமல் சம்பவம் என்று ட்வீட் செய்த ஏர் இந்தியா விமான நிறுவனம், அடுத்த ஒரு மணிநேரத்தில் தங்களது விமானம் விபத்துக்குள்ளானது என்று எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியது.

அகமதாபாத் விமான விபத்து

அந்தப் பதிவில், “அகமதாபாத் டு லண்டன் செல்லும் AI171 விமானம் டேக் ஆஃப் ஆன பிறகு விபத்துக்குள்ளானது என்பதை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அந்தப் பதிவில், 787-8 போயிங் ரக விமானம் சரியாக மதியம் 1:38 மணியளவில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் நாட்டவர்கள், 7 போர்ச்சுகீசியர்கள், ஒரு கனேடியர் மற்றும் விமான ஊழியர்கள் என 242 பேருடன் புறப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த, 169 இந்தியர்களில் குஜராத்தின் முன்னாள் முதல்வர் (2016 – 2021) விஜய் ரூபானியும் ஒருவர். லண்டனிலுள்ள தனது மகளைப் பார்ப்பதற்காக இந்த விமானத்தில் விஜய் ரூபானி புறப்பட்டிருந்தார்.

தற்போது, விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இருப்பினும், உயிரிழந்தோரின் அடையாளம் மற்றும் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

Ahmedabad Airplane Accident -  Vijay Rupani
Ahmedabad Airplane Accident – Vijay Rupani

மறுபக்கம், இந்தியப் பிரதமர், இங்கிலாந்து பிரதமர் என அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்துவிட்டார் என்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

மெஹ்சனாவில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பட்டீல், “முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார். பாஜக குடும்பம் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறது.

இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் சாந்தியையும், அவர்களின் குடும்பங்களுக்கு வலிமையையும் அமைதியையும் இறைவன் வழங்கட்டும்.” என்று தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *